கண்ணின் வலியா? கழகத்தின் வலிவா? எதில் கவனம் செலுத்துவது? – கருணாநிதி கேட்கிறார்!

கண்ணின் வலியா? கழகத்தின் வலிவா? எதில் கவனம் செலுத்துவது? – கருணாநிதி கேட்கிறார்!

“எனக்கு வலி, தொல்லை எவ்வளவு இருந்தாலும், நமது கழகத்திற்கும், தமிழகத்திலே வாழும் மக்களுக்கும் இன்னமும் பணியாற்ற வேண்டுமென்று என் உள்ளத்திலே எழுகின்ற உணர்ச்சியினால் தான் நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன் என்பதை நீ உணர்” -என்று திமுக தலைவர் கருணாநிதி தனது ட்விட்டரில் கூறியுள்ளார். அத்துடன் தனது கண்ணின் வலி அதிகமா அல்லது தம்முடன் அரசியல் பயணம் நடத்தியோர் வலி அதிகமா என்றும் சில விளக்கங்களை கருணாநிதி தெரிவித்துள்ளார் .
karu feb 9
இது குறித்து அவரது ட்விட்டில், “1953ஆம் ஆண்டு நான் சந்தித்த கார் விபத்து பற்றியும், அதனால் என்னுடைய ஒரு கண் பாதிக்கப்பட்டது பற்றியும், அந்தப் பாதிப்பு இன்று வரையில் என்னைத் தொல்லைப்படுத்தி வருவதைப் பற்றியும் விவரிக்க விரும்புகிறேன்.1953ஆம் ஆண்டு முகவை மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடியில் எனக்கு ஒரு பாராட்டு விழாப் பொதுக் கூட்டம். அதில் கலந்து கொள்ள சென்னையில் மாலை மூன்று மணிக்குக் காரில் புறப்பட்டேன். குறித்த நேரத்தில் பரமக்குடி போய்ச் சேர வேண்டுமே என்பதற்காக கார் சற்று வேகமாகச் சென்று கொண்டிருந்தது.

திருச்சி அருகில் சென்று கொண்டிருந்த போது, கொம்பு நீளமாக உள்ள ஒரு கொடி ஆடு காரின் ரேடியேட்டரில் பாய்ந்ததால், கார் பழுதாகி, வேறொரு வாடகைக் கார் எடுத்துக் கொண்டு பரமக் குடிக்குப் புறப்பட்டேன். என்னுடன் காரில் அன்பில் தர்மலிங்கம், திருச்சி பராங்குசம், திருவாரூர் தென்னன் ஆகியோர் வந்தார்கள். மேடைக்குச் செல்லும் வரை மதுரை முத்து கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். நான் போனதும் பேசத் தொடங்கி, இரவு ஒரு மணிக்குக் கூட்டம் முடிவுற்றது. மறுநாள் திருச்சி தேவர் மன்றத்தில் சிறப்புக் கூட்டம். திரும்பும் போது அசதியின் காரணமாக நானும், நண்பர்களும் கண்ணயர்ந்து விட்டோம். வாடகைக் காரை ஓட்டிய தோழரும் சற்றுக் கண்ணயர்ந்து விட்டார்.

அதனால் திருச்சி வரும் வழியில் திருப்பத்தூர் பயணிகள் விடுதிக்கு அருகில் கார் மைல் கல்லில் மோதி, மைல் கல்லும் உடைந்து, பயணிகள் விடுதியின் முன்புற வாயில் கதவில் போய் மோதிக் கொண்டு நின்றது. இதற்கிடையே காருக்குள் இருந்த நாங்கள் உருண்டோம். நண்பர்களுக்கு காயம் எதுவும் இல்லை. ஆனால் என் மூக்குக்குள்ளேயிருந்து ரத்தம் “குபு குபு” எனக் கொட்டியது. முதல் சிகிச்சை செய்து கொண்டு திருச்சி வந்து சேர்ந்தோம். மறுநாள் காலையில் முகமே வீங்கி, என்னுடைய இடது கண்ணில் வலி தொடங்கியது.

வலியோடு திருச்சி நிகழ்ச்சியிலும், கன்னியாகுமரி மாவட்ட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சென்னை திரும்பி, நண்பர் முல்லை சத்தி பிடிவாதமாக என்னை வேலூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கேதான் மருத்துவர் கண்ணிற்குள் ஒரு சிறு நரம்பில் கீறல் ஏற்பட்டிருப்பதாகவும், குறைந்தது ஆறு மாத காலத்திற்காவது எழுதவோ, கூட்டங்களில் பேசவோ, படிக்கவோ கூடாது என்று கூறினார். பொது வாழ்வில் ஈடுபட்ட எனக்கு அதையெல்லாம் கடைப்பிடிக்க முடியுமா என்ன?

அரசியலிலும், கலை உலகிலும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்களான இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்., நடிகமணி டி.வி.நாராயணசாமி ஆகியோரின் விருப்பத்தை நிறைவேற்ற, சென்னையில் ஓட்டல் ஒன்றில் “மணிமகுடம்” நாடகத்தின் கடைசி காட்சிகளை எழுதிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று என் இடது கண்ணில் ஒரு ஈட்டி பாய்ந்தது போன்ற வேதனை! கையில் இருந்த பேனாவையும், தாளையும் வீசி எறிந்து விட்டு, “அய்யோ” என்று அலறினேன்.

எப்படியோ வீடு வந்தேன். வீட்டார் என்னைப் பார்த்துக் கதறினார்கள். இடது கண் பெரிதாக வீங்கி விட்டது. குத்தல் வலி உயிரைப் பிளந்தது. தாங்க முடியாத வேதனை. சென்னையில் மிகச் சிறந்த மருத்துவர் முத்தையா வந்து பார்த்து விட்டு, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமென்றார். கண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. பன்னிரண்டு முறை அறுவைச் சிகிச்சை நடத்தினார்.

1953-54ஆம் ஆண்டிலிருந்து அந்தக் கண் பாதிக்கப்பட்ட நிலையிலேயே வேதனைகளைத் தாங்கிக் கொண்டு அரசியல் பயணத்தைத் தொடர்ந்தேன். 1967ஆம் ஆண்டு செப்டம்பரில் மீண்டும் ஏற்பட்ட பயங்கரக் கார் விபத்து ஒன்றில் நான் சிக்கி, கண்ணில் ஏற்கனவே இருந்து வந்த வலி மேலும் அதிகமாயிற்று. அவ்வப்போது மருத்துவர்கள் முத்தையா, ஆப்ரகாம், இராமலிங்கம், மதுரை வெங்கடசாமி போன்றவர்கள் சிகிச்சை அளித்து வந்தபோதிலும், கண்ணில் ஊசியால் குத்துவது போன்ற வேதனை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. ஏன், அந்த வலி இன்றும் என்னை வேதனைப்படுத்திக் கொண்டுதான் உள்ளது.

கண்ணின் வலியா? கழகத்தின் வலிவா? எதில் கவனம் செலுத்துவது? என்ற நோக்கத்தோடு நான் பணியாற்றுவதைப் புரிந்து கொண்டு, நீயும் கழகத்தின் வெற்றிக்காக எப்போதும் போல் ஓயாது உழைப்பாய் என்ற நம்பிக்கையோடும், உழைக்க வேண்டும்! எனக்கு வலி, தொல்லை எவ்வளவு இருந்தாலும், நமது கழகத்திற்கும், தமிழகத்திலே வாழும் மக்களுக்கும் இன்னமும் பணியாற்ற வேண்டுமென்று என் உள்ளத்திலே எழுகின்ற உணர்ச்சியினால் தான் நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன் என்பதை நீ உணர்ந்து கொண்டு, நீயும் கழகத்தின் வெற்றிக்காக எப்போதும் போல் ஓயாது உழைப்பாய் என்ற நம்பிக்கையோடும், உழைக்க வேண்டுமென்ற வேண்டுகோளோடும் இந்தக் கடிதத்தை நிறைவு செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்

error: Content is protected !!