பள்ளிக்கல்வி இயக்குனர் முனைவர் கண்ணப்பன்!
![பள்ளிக்கல்வி இயக்குனர் முனைவர் கண்ணப்பன்!](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2024/06/edu-1-1.jpg)
புதிய பள்ளிக்கல்வி இயக்குனர் முனைவர் கண்ணப்பன் சார் அவர்களுக்கு அன்பு வணக்கமும் வாழ்த்துகளும் 🎉.
அதிகாரியாக மட்டும் இல்லாமல் மனிதாபிமானமும் மனித மாண்பும் நிறைந்த நல் மனிதர் இவர். பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2010 ஆம் ஆண்டு, இவரது தலைமையின் கீழ் சமச்சீர் கல்வி பாடநூல் ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
ஐந்தாம் வகுப்புக் குழந்தைகளுக்கான புத்தகத் தயாரிப்பு அது. நாம் எழுதும் பாடங்கள், குழந்தைகளுக்கு வாசிக்கக் கடினமாக இருக்கக் கூடாது என்று ஒவ்வொரு வரியையும் பார்த்துப் பார்த்து செதுக்குவது போல செம்மைப்படுத்துவார்.அப்போது அவர் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் (SSA JD ) இணை இயக்குநராகப் பணியாற்றினார். நிர்வாகப் பணிகளில் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் புத்தகத் தயாரிப்புப் பணியில் நேரடியாக பாடத்தைப்படித்து சரிபார்த்து குழந்தைகளுக்கு ஏதுவாக அவற்றை உருவாக்க மெனக்கெடுவார்களா எனத் தெரியாது .ஆனால் கண்ணப்பன் சார் தன்னை முழுமையாக அதில் ஈடுபடுத்திக் கொண்டார். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் புத்தகத் தயாரிப்புப் பணியும் இன்னும் பசுமரத்தாணி போல என் மனதில் நிற்கிறது.
அது மட்டுமல்ல, பத்தாண்டுகளுக்கு முன்பே SCERT இல் 40 ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி வழங்க முயற்சி எடுத்து அதன் நீட்சியாக தமிழகம் முழுவதும் இன்று திறன் வாய்ந்த ஆசிரியர்களாக அறியப்படும் பலரும் உருவாக வாய்ப்புகளை உருவாக்கியவர் அப்போது நானும் ஒருங்கிணைப்புப் பணியில் இருந்தேன். இதுபோல் அவருடன் இணைந்து கல்வி அமைப்பில் மாற்றங்கள் உருவாகப் பணியாற்றிய பல அனுபவங்கள் என்னிடம் உண்டு
ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு பள்ளிக் கல்வி இயக்குநர் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை பள்ளிக் கல்வி இயக்குநர் பணியில் இருந்த முனைவர் அறிவொளி அவர்கள் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.ஆகவே தொடக்கக் கல்வி இயக்குநராகப் பணியாற்றி வந்த #முனைவர் #கண்ணப்பன் அவர்கள் மீண்டும் பள்ளிக் கல்வி இயக்குநராகப் பணியேற்கிறார்
வாழ்த்துகள் சார் 🎉