மாடல் அழகியாக இருந்தவர் கல்வி இலாகா அமைச்சரா? – காங்கிரஸ் அப்செட்!!
![மாடல் அழகியாக இருந்தவர் கல்வி இலாகா அமைச்சரா? – காங்கிரஸ் அப்செட்!!](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2014/05/Smriti-Irani-bjp.jpg)
டெல்லியைச் சேர்ந்த ஸ்மிருதி இரானி மும்பையில் குடியேறி மாடலிங் தொழில் செய்து வந்தார். 1998-ம் ஆண்டு பெமினா நடத்திய இந்திய அழகிப் போட்டியில் இறுதிப் போட்டி வரை பங்கேற்றார். அதன் பிறகு டி.வி. சீரியங்களில் நடித்து புகழ் பெற்றார். பல தொடர்களை சொந்தமாக தயாரித்துள்ளார்.தற்போது அமேதியில் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த ஸ்மிருதி இரானிக்கு மனிதவள மேம்பாட்டு துறை வழங்கப்பட்டதை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மகேன் தனது டுவிட்டரில், ’இதுவா மோடி மந்திரி சபை? ட்டப்படிப்பு கூடபடிக்காத ஸ்மிருதி இரானிக்கு கல்வித்துறையா? வேட்புமனுவில் கொடுத்துள்ள அவரது கல்வித் தகுதியை பாருங்கள். மந்திரி சபை பிரகாசமாக இல்லை. பல்வேறு பிராந்தியங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத் திறமை, அனுபவம் இல்லாதவர்களும்தான் இடம் பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே போல் மாடல் அழகியாக இருந்தவர், அழகி போட்டியில் பங்கேற்றவர் கல்வி இலாகா மந்திரியா? என்றும் காங்கிரசில் பலர் கிண்டல் செய்துள்ளனர்.இதற்கு பதில் அளித்து மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, ஸ்மிருதி இராணி பாராளுமன்றத்தில் ஆங்கிலத்திலும், இந்தியிலும் சரளமாக பேசியது தெரியாதா? என்று கூறியுள்ளார்.ஸ்மிருதி இரானியை காங்கிரஸ் விமர்சித்து இருப்பதற்கு காஷ்மீர் முதல்-மந்திரி உமர்அப்துல்லா பதில் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் விமானத்துறை மந்திரிக்கு விமானம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, சுரங்கத்துறை மந்திரி சுரங்கத்தில் பணியாற்றி இருக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இதனிடையே கடந்த 10 ஆண்டுகால மத்திய அரசில், அர்ஜுன் சிங், கபில் சிபல் மற்றும் பல்லம் ராஜு போன்ற ஆண்களே மனிதவளத்துறை அமைச்சர்களாக பதவி வகித்தனர். அவர்களெல்லாம் வயது முதிர்ந்தவர்கள். ஆனால், இப்போது, நாட்டின் மிக முக்கியமான துறைக்கு, 40 வயதைக்கூட தொடாத ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் ஸ்மிருதியின் அரசியல் பயணம் 2003 ஆம் ஆண்டு பாரதிய ஜனதாக் கட்சியில் இணைந்துகொண்ட போதுதான் ஆரம்பித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.