விதிமீறல் செய்யும் எல்லா வாகனங்களும் பறிமுதல்-ஐகோர்ட் ஆர்டர்!

விதிமீறல் செய்யும் எல்லா வாகனங்களும் பறிமுதல்-ஐகோர்ட் ஆர்டர்!

தமிழகத் தலைநகர் சென்னையில் தனியார் வாகனங்களில் போலீஸ், அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அண்மையில் சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை தமிழகம் முழுவதும் அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை எனவும், வாகனங்களின் முன்பக்கம், பின்பக்க கண்ணாடிகளில் மத சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், நடிகர்களின் படங்களை ஒட்டத் தடை விதிக்க வேண்டும் எனவும், பேருந்துகளின் பின்புறமும், பக்கவாட்டு பகுதிகளிலும் விளம்பரங்கள் செய்வதை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வு, போக்குவரத்து விதிகளை மீறும் அரசியல்வாதிகளின் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதித்தும், கண்ணாடிகளில் கருப்பு கண்ணாடி ஒட்டியுள்ள வாகனங்களை சோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 20-ம் தேதி விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி, விசாரணையை ஒத்தி வைத்தனர். மேலும், ஜூன் 20ம் தேதி விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

error: Content is protected !!