இந்திய பல்கலைக்கழகங்களில் இனி ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை!

இந்திய பல்கலைக்கழகங்களில் இனி ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை!

ம் நாட்டில் உள்ள பல்கலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் ஆண்டுக்கு இரு முறை மாணவர்களை சேர்த்துக் கொள்ள பல்கலை மானியக் குழு(யுஜிசி) அனுமதி வழங்கி உள்ளது. உலகளவில் பின்பற்றப்படும் நடைமுறையை இந்தியாவிலும் பின்பற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

’இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள், இனி ஆண்டுக்கு இருமுறை சேர்க்கை வழங்க அனுமதிக்கப்படும்’ என்று பல்கலைக்கழக மானியக் குழுவின்(யுஜிசி) தலைவர் ஜெகதேஷ் குமார் இன்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் `கூறியதாவது:

இனி உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையை ஆண்டுக்கு இரு முறை நடத்தி கொள்ளலாம். இது அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும். ஜன., பிப்., மற்றும் ஜூலை ஆக., மாதங்களில் மாணவர் சேர்க்கை நடக்கும். இதனால், தேர்வு முடிவு, உடல்நலக்குறைவு மற்றும் தனிப்பட்ட காரணங்களினால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் படிப்பை தொடர்வதற்கு ஏதுவாக இருக்கும். கல்வி நிறுவனங்களில் சேர மாணவர்கள் காத்திருக்கும் காலமும், நேரமும் குறையும். பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில், இனிமேல் நிறுவனங்கள் கல்வி நிறுவனங்களில் இரண்டு முறை ‛ கேம்பஸ் இண்டர்வியூ’ நடத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். பள்ளிகளின் தேர்வு முடிவு அறிவிப்பதில் தாமதம், உயர்கல்வியில் சேர்வதில் மாணவர்களின் தடுமாற்றம், அவர்களின் உடல்நலன் பாதிப்பு உள்ளிட்ட தனிப்பட்ட பிரச்சினைகளால் தவிப்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி 2024-25ம் கல்வியாண்டு முதல், ஜூலை-ஆகஸ்ட் மற்றும் ஜனவரி-பிப்ரவரி என இரு சேர்க்கை சுழற்சிகள் நடைமுறைக்கு வருகின்றன. உலகளவில் முன்னணி கல்வி நிறுவனங்கள் இந்த வகையிலான ஆண்டுக்கு இருமுறை சேர்க்கை நடைமுறையை ஏற்கனவே பின்பற்றி வருகின்றன. இந்திய உயர் கல்வி நிறுவனங்களும் இத்தகைய சேர்க்கை சுழற்சியை ஏற்றுக்கொண்டால் நமது உயர் கல்வி நிறுவனங்கள், சர்வதேச கல்வி நிறுவனங்களுடனான ஒத்துழைப்பையும் மாணவர் பரிமாற்றத்தையும் மேம்படுத்த முடியும். இதன் விளைவாக, நமது உலகளாவிய போட்டித்தன்மை மேம்படும்; மேலும் உலகளாவிய கல்வித் தரங்களுடன் இணைய வாய்ப்பாகும் எனவும் யுஜிசி கருதுகிறது.

இந்தியாவில் பள்ளிக்கல்வியை முடிக்கும் மாணவர்களில் கணிசமானோர் உயர்கல்வி வாய்ப்பை தவற விடுகின்றனர். அதிலும் பெரும்பாலான பெண்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு என்பது எட்டாக்கனியாகிறது. யுஜிசியின் புதிய மாற்றத்தின் மூலம் உயர்கல்வியைப் பெறுவது மேலும் இலகுவாகிறது. இதனால் உயர்கல்வியில் சேர்ந்து பயனடைவோர் எண்ணிக்கையும், அதில் பாலின சமத்துவமும் அதிகரிக்கக்கூடும்.

எனினும் இந்த நடைமுறை கட்டாயமில்லை என்றும், தேவையான உள் கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் யுஜிசி தெரிவித்துள்ளது. அதிகாரபூர்வ முழுமையான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

error: Content is protected !!