வாக்குச்சீட்டு முறை வேண்டும்-ஜெகன் மோகன் ரெட்டி!
![வாக்குச்சீட்டு முறை வேண்டும்-ஜெகன் மோகன் ரெட்டி!](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2024/06/jagmohan1.webp)
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இதற்கிடையே நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, அதன்படியே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. அதன்படி, தற்போது எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், பாஜக தன் கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியை அமைத்துள்ளது.
இந்நிலையில் ஆந்திர முன்னாள் முதல்வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும். ஜனநாயகத்தில் மேம்பட்ட நாடுகளில் வாக்குச்சீட்டு முறையே உள்ளன; வாக்கு இயந்திரங்கள் இல்லை. நமது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வை நிலைநிறுத்த நாமும் அதை நோக்கி நகர வேண்டும். வாக்கு இயந்திரங்களை அகற்ற வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.