டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்தது சி பி ஐ!
![டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்தது சி பி ஐ!](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2024/06/cbi-1.jpg)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினில் வெளிவர முயலும் நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நேற்று சிபிஐ அவரை திகார் சிறையில் கைது செய்து உள்ள தகவலை வழங்கி உள்ளது.
ஆம் ஆத்மி கட்சி மீது டெல்லியில் மதுபான கொள்கைகளை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இது தொடர்பாக சி பி ஐ விசாரணைக்கு அந்த மாநில கவர்னர் உத்தரவிட்டார்.இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக எழுந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, இதுதொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை செய்து டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ்சிசோடியா மற்றும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. நேற்று முன் தினம் இந்த வழக்கை விசாரித்து வந்த சி பி ஐ அதிகாரிகள் டெல்லி திகார் சிறைக்கு சென்று அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தினர்.நேற்று இரவு இதன் தொடர்ச்சியாக திகார் சிறைக்கு சென்ற சி பி ஐ அதிகாரிகள், அங்கு அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிறிதுநேரம் விசாரணை நடத்திய பின்னர் அவரை கைது செய்வதாக கூறினர். இது தொடர்பான ஆவணத்தை அவருக்கும், சிறைத்துறைக்கும் அதிகாரிகள் வழங்கினர்.
முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை, டெல்லி உயர்நீதிமன்ற,ம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அவரை சி பி ஐ கைது செய்து இருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.