ஜூலியன் அசாஞ்சே ஃப்ரீ பேர்ட் ஆனார்!
![ஜூலியன் அசாஞ்சே ஃப்ரீ பேர்ட் ஆனார்!](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2024/06/julian-assange-ecuador.jpg)
‘விக்கிலீக்ஸ்’ இணைய செய்தி நிறுவனத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பிரிட்டன் சிறையிலிருந்து இரண்டு தினங்களுக்கு முன் தினம் விடுவிக்கப்பட்ட நிலையில், நேற்று அமெரிக்க நீதிமன்றமும் தண்டனை எதுவுமின்றி அவரை விடுவித்துள்ளது.
ஜூலியன் அசாஞ்சே நண்பர்களுடன் இணைந்து கடந்த 2006-ஆம் ஆண்டில் ‘விக்கிலீக்ஸ்’ இணையதளத்தைத் தொடங்கினார். அதில், அமெரிக்க ராணுவத்தினர் செய்துவரும் அத்துமீறல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவா் வெளியிட்ட தூதரக உரையாடல் பதிவுகள் உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தின. இது போன்ற ரகசிய ஆவணக் கசிவுகள் மூலம் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக ஜூலியன் அசாஞ்சே மீது குற்றஞ்சாட்டிய அமெரிக்க நீதித் துறையினர், உளவு பார்த்ததாக அவா் மீது 2010இல் 18 குற்றப் பிரிவுகளின் கீழ் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இய்ஜை அடுத்து தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில், ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார்.அங்குள்ள ஈக்வடார் நாட்டின் துாதரகத்தில் அடைக்கலம் புகுந்தார். இதற்கிடையே, மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் அவருக்கு எதிராக பாலியல் பலாத்கார வழக்குகள் தொடரப்பட்டன. இதனால், ஏழு ஆண்டுகள் துாதரகத்துக்குள்ளேயே அவர் தங்கியிருந்தார். பின், அந்த வழக்குகள் கைவிடப்பட்டன.கடந்த, 2019ல் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு, லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த, பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்தது.
ராணுவ ரகசியங்களை வெளியிட்டது குற்றம் என்று, அமெரிக்க அரசால் குற்றம் சாட்டப்பட்டாலும், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரத்துக்காக அவர் போராடியதாக பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அவர் மீதான வழக்குகளில் இழுபறி நிலவி வந்த நிலையில், அவரை விடுதலை செய்ய, ஆஸ்திரேலியா கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில், அமெரிக்க அரசுடன் ஒரு சமரசம் ஏற்பட்டது. அதன்படி, அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராகி, தான் குற்றமற்றவர் என்று வாதிட முன்வந்தால், வழக்குகளில் இருந்து விடுவிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து, லண்டன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜூலியன் அசாஞ்சே, பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான வடக்கு மரியானா தீவில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.
ராணுவ ரகசிய ஆவணங்களை வெளியிட்டதில் சதி உள்ளதா என்ற ஒரு பிரிவின் கீழ் மட்டும் அவர் மீது வழக்கு விசாரிக்கப்பட்டது. தான் குற்றமற்றவர் என்று அசாஞ்சே வாதாடினார். அவருக்கு, 62 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. லண்டன் சிறையில், 62 மாதங்கள் சிறையில் இருந்ததை கணக்கில் எடுத்துக் கொண்டு, அசாஞ்சேயை விடுவித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து, 14 ஆண்டு சட்டப் போராட்டங்களில் இருந்து அசாஞ்சே மீண்டுள்ளார். அவர் ஆஸ்திரேலியாவின் கான்பராவுக்கு திரும்பினார். அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் ஆரத்தழுவி அசாஞ்சேவை வரவேற்றனர்.