அதிமுக புது நிர்வாகிகள் பட்டியலில் ஓபிஎஸ் மீண்டும் பொருளாளர்!
அதிமுகவிற்கு புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். கொள்கைப் பரப்பு செயலாளராக தம்பித்துரையும் பொருளாளராக ஓ.பன்னீர் செல்வமும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அதிமுக புதிய நிர்வாகிகள் பட்டியல் : அ.தி.மு.க., அவைத்தலைவர் – மதுசூதன் அ.தி.மு.க., பொருளாளர் – ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க., கொள்கை பரப்புச் செயலாளர் – தம்பிதுரை அமைப்பு செயலாளர்கள் – வைத்திலிங்கம், விசாலாட்சி நெடுஞ்செழியன் அ.தி.மு.க. தலைமை செயலாளர் – எடப்பாடி பழனிச்சாமி அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் – தமிழ்மகன் உசேன் சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் – ஜஸ்டின் செல்வராஜ் ஜெயலலிதா பேரவை செயலாளர் – அமைச்சர் உதயகுமார் தேர்தல் பிரிவு செயலாளர் – பொள்ளாச்சி ஜெயராமன் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் – சின்னசாமி அ.தி.மு.க. மருத்துவ அணி செயலாளர் – டாக்டர் வேணுகோபால்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த அசெம்பளி எலெக்சனில் மகத்தான வெற்றி பெற வேண்டும் 234 தொகுதிகளையும் கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்க வேண்டும் என்று நினைத்த ஜெயலலிதா, 227 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார். கூட்டணி கட்சிக்கு 7 இடங்களை ஒதுக்கி 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்தார். சட்டசபை தேர்தலில் பல இடங்களில் நிர்வாகிகள் ஒத்துழைக்காமல் இருந்த காரணத்தால் பல இடங்களில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோல்வியடைந்தது. குமரி மாவட்டத்தில் மூன்றாவது, நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது. சில தொகுதிகளில் டெபாசிட் பறிபோனது. இதனையடுத்து நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிமுக புதிய நிர்வாகிகளை ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
“இதனிடையே ஒ பன்னீருக்கு மறுபடியும் கட்சி பொருளாளர் பதவி கிடைத்திருப்பது சாதாரண விசயமில்லை. பொதுச்செயலாளர் பதவிக்கு அடுத்ததுதான் பொருளாளர் பதவி. திமுகவில் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர், கணக்கு கேட்ட சர்ச்சையினால்தான் அங்கிருந்து நீக்கப்பட்டு அஇஅதிமுக உருவாக்க காரணமாக அமைந்தது. தமிழக முதல்வராகவும் ஆனார் என்பது வரலாறு. திமுகவில் பொருளாளர் பதவியில் இருந்த கருணாநிதி, அந்த கட்சியின் தலைவரானார். பின்னர் முதல்வரானார். அதே சென்டிமென்டில் தனது மகன் ஸ்டாலினுக்கும் திமுக பொருளாளர் பதவி வழங்கினார். அப்படிப்பட்ட முக்கிய பதவியாக விளங்கும் பொருளாளர் பதவி” என்று பீடிகையுடன் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் நம் ஸ்பெஷல் கரஸ்பாண்டட் கட்டிங் கண்ணையா.
இது குறித்து அவர், “ஆனால் இந்த டிரசஸர் போஸ்ட் என்பது அதிமுகவில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமில்லாத பதவியாக மாறிவிட்டதாக பேசப்பட்டது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை அதிமுகவில் பொருளாளர் பதவியில் இருந்தவர்களின் அரசியல் அஸ்தமனமாகிப் போனதுதான். •எம்ஜிஆர் உயிரோடு இருந்தபோது அதிமுக பொருளாளர் பதவி தலித்துக்கு என்ற அடிப்படையில் சவுந்திரபாண்டி, துரைராஜ் போன்றோருக்கு வழங்கப்பட்டது. பின்னர் அவரே அந்த முறையை மாற்றி பண்ருட்டி ராமச்சந்திரனை கொண்டு வந்தார். பிறகு அமைச்சராக இருப்பவருக்கு அந்த பதவி கிடையாது என திருப்பத்தூர் மாதவனை கொண்டு வந்தார். •ஜெயலலிதா பொதுச் செயலாளரானதும் எம்ஜிஆர் பார்முலாவை தூக்கி எறிந்தார். கட்சியின் அவசர பொதுக்குழுவை கூட்டி பொருளாளர் பதவியை நியமன முறையில் மாற்றம் செய்தார். • அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கண்ணப்பன் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இன்று அட்ரஸ் இல்லாமல் இருக்கிறார். •கடந்த 2000 முதல் 2006ம் ஆண்டு வரை அ.தி.மு.க. பொருளாளராக, ஜெயலலிதாவுக்கு மிக நம்பிக்கைக்குரியவர்கள் பட்டியலில் இருந்தார் திண்டுக்கல் சீனிவாசன். • திண்டுக்கல் சீனிவாசனை ஓரம் கட்டி டிடிவி தினகரன் பொருளாளர் ஆனார். அதிகாரமிக்க பதவியான பொருளாளர் பதவிகளை அலங்கரித்தவர். இப்போது அதிகாரம் இல்லாமல் இருக்கிறார். • தினகரனின் பொருளாளர் பதவியை காலி செய்து விட்டு ஓ. பன்னீர் செல்வத்தை பொருளாளராக அறிவித்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதா சிறையில் இருந்த போது ஓ.பி.எஸ் முதல்வரானதோடு அதிமுகவின் அதிகாரமிக்க மையமாக விளங்கிய ஐவர் அணியில் முக்கியமானவராக இருந்தார் . ஆனால் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை பாய்ந்தது. •அதிமுகவின் பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்படலாம் என்றும் புதிதாக ஒருவர் நியமனம் செய்யப்படலாம் என்றும் பரவலாக பேசப்பட்டது. செல்லூர் ராஜூவின் பெயரும் அடிபட்டது. • பொருளாளர் பதவி அதிர்ஸ்டமில்லாத பதவி என்று பலரும் அலறினர். அந்த பதவியில் அடுத்து அமரப்போகிறவர் யார் என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில்தான் பொருளாளராக மீண்டும் ஓ.பன்னீர் செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். • அரசின் கஜானாவை பாதுகாக்க நிதி அமைச்சராக ஓ. பன்னீர் செல்வம் நியமனம் செய்யப்பட்டது போல, கட்சியின் கஜானாவை பாதுகாக்க சரியான நபர் ஓ.பன்னீர்செல்வம்தான் என்று முடிவு செய்து விட்டார் ஜெயலலிதா” என்றார்.