ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடத்தப்படும்’ – தேர்தல் ஆணையம் அறிவிப்பு1
![ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடத்தப்படும்’ – தேர்தல் ஆணையம் அறிவிப்பு1](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2017/11/by-el-nov-24.jpg)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து காலியாக இருந்த ஆர்.கே.நகருக்கு, கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதிக அளவில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாகக் கூறி இடைத்தேர்தலைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாகத் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, இடைத்தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதற்கான ஆலோசனையில் ஈடுபடுவதற்காக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் இன்று (நவம்பர் 24) டெல்லி செல்லவுள்ளத்காக தகவல் வெளியான நிலையில் ஆர் கே நகருக்கு டிசம்பர் 21ம் தேதி தேர்தல் நடக்கும் என்று ஆணையம் அறிவித்து விட்டது. . மேலும், நவம்பர் 27-ம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறும் என்றும் வேட்புமனு தாக்கல்செய்ய டிசம்பர் 4-ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தப்படும்போது அங்குள்ள 256 வாக்குச் சாவடிகளிலும் யாருக்கு ஓட்டுப் பதிவானது என்பதை வாக்காளர்கள் உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையிலான வி.வி.பேட் எந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இரட்டை இலை சின்னத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அணியினருக்கு ஒதுக்குவதாகத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. ஆர்.கே.நகர் தேர்தலுக்கு விரைவில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், அவர் பழனிசாமி அணியைச் சேர்ந்தவரா அல்லது பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதே சமயம் மீண்டும் டி டி வி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது