தேசிய பங்குச் பங்குசந்தை முறைகேடு வழக்கு: ஆனந்த் சுப்பிரமணியத்தை சிபிஐ கைது செய்தது!
தேசிய பங்குச் சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்ட செயல் அலுவலர் ஆனந்த் சுப்பிரமணியனை சென்னையில் சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
தேசிய பங்குச் சந்தையான என்எஸ்இ-ன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா, தனது பதவிக் காலத்தில், என்எஸ்இ (NSE) தொடர்பான முக்கிய தகவல்களை பரிமாறிக்கொண்டதாகவும் இமயமலையில் இருக்கும் ஒரு சாமியாரின் சொல்படி முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அந்த சாமியாரின் பரிந்துரையின் பேரில் ஆனந்த் சுப்பிரமணியனை என்.எஸ்.இ-ன் ஆலோசகராக நியமித்ததாகவும் கூறப்படுகிறது. தேசிய பங்குச் சந்தையில் பணியாற்றிய போது ஆல்கோ டிரேடிங் ஒப்பந்தத்தின் போது தரகர்களுக்கு உதவி புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சித்ரா மற்றும் ஆனந்த் இருவரும் இணைந்து பணம் சம்பாதிக்கும் நோக்கில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும் பங்குச் சந்தை விதிமுறைகளை மீறி, உயர் அதிகாரிகளை நியமனம் செய்த சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு செபி (SEBI) அமைப்பு, 3 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. மேலும் பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குநர் ரவி நாராயணன், ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோருக்கு தலா ரூ.2 கோடி அபராதமும் தேசிய பங்குச்சந்தை குறைதீர்ப்பு அலுவலர் வி.ஆர். நரசிம்மனுக்கு ரூ.6 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த 2013-16ஆம் ஆண்டுக்கு இடையே என்எஸ்இ தலைமை நிர்வாக அதிகாரியாகவும், எம்.டி-யாகவும் இருந்த சித்ரா ராமகிருஷ்ணா பங்குச்சந்தை தொடர்பான தகவல்கள், டிவிடெண்ட், கம்பெனி ஆண்டறிக்கை விபரம் உட்பட அனைத்து அம்சங்கள் குறித்தும் ரகசிய சாமியாருடன் பகிர்ந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் தேசிய பங்குச் பங்குசந்தை முறைகேடு வழக்கில் ஆனந்த் சுப்பிரமணியத்தை சிபிஐ கைது செய்துள்ளது.