பாரதீய ஜனதாவின் தகவல் தொழில் நுட்ப அணியில் ஏறத்தாழ 20,000 பேர் பணிபுரிகிறார்கள்!

பாரதீய ஜனதாவின் தகவல் தொழில் நுட்ப அணியில் ஏறத்தாழ 20,000 பேர் பணிபுரிகிறார்கள்!

டந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்து கொண்டிருந்த காலம், நான் பெங்களூரின் ஊரகப் பகுதி ஒன்றில் ஒரு கடையில் அமர்ந்திருந்தேன். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக மோடியின் சிறப்புப் வானூர்திப் படை பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாமை அழித்து விட்டதாகவும் தொலைக்காட்சியில் யாரோ அலறிக் கொணாடிருந்தான். இஸ்லாமியர்களின் தாக்குதலில் இருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அங்கிருந்த சில முகவர்களும், கடைக்காரரும் ஏறத்தாழ ஹிஸ்டீரியா வந்தவர்களைப் முழக்கமிட்டார்கள். நான் அமைதியாக இதெல்லாம் திட்டமிட்ட நாடகம் போலிருக்கிறது, புல்வாமா நிகழ்வே திட்டமிட்ட சதியாக இருக்கலாம், அதற்குப் பதிலடி என்பது மோடி பரிவாரின் சித்துவேலை போலிருக்கிறது என்று உரத்த குரலில் பேசினேன். அதிர்ச்சி அடைந்தவர்கள் “நீங்களெல்லாம் தேச விரோதிகள்” என்று என் மீது பாய்ந்து பிராண்டினார்கள். மிக அழகாக புல்வாமா நிகழ்வு Script செய்யப்பட்டு, தேசப் பாதுகாப்பு, பெரும்பான்மை இந்துக்களின் பாதுகாப்பு என்று உணர்வு ரீதியாக ஒரு கொந்தளிப்பை உருவாக்கி இருந்தது அன்றைய மோடி மீடியா.

நேற்று முன்தினம் ஒரு வழக்கமான முட்டாள் WhatsApp பல்கலைக்கழக நண்பனை சந்திக்க நேர்ந்தது. கர்நாடகாவில் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு முந்தைய நாள். திடீரென்று தனது Facebook பக்கத்தில் இருந்த ஒரு செய்தியை எடுத்து என்னிடம் காண்பித்தவன் “நமது சொத்தை எல்லாம் பிடுங்கி முஸ்லீம்களுக்கு‌ கொடுக்கப் போகிறார்கள். ஆகவே நாம் மோடிக்கு வாக்களித்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என்று உணர்ச்சி வசப்பட்ட அந்த நண்பனை என்னால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. ஏனெனில் அவன் முற்றிலும் நோய்வாய்ப்பட்ட சூழலில் இருப்பவன், அவனது கோவணத்தை உருவினாலும் அவன் மோடிக்கு வாக்களிப்பதில் இருந்து மாறமாட்டான். அவனால் சுயமாக சிந்திக்க முடியாது. சென்ற முறை எப்படி தேசப் பாதுகாப்பு நாடகம் நடந்ததோ அதே போல் இந்த முறை இந்துக்களின் சொத்துப் பாதுகாப்பு நாடகம். அதிலும் நேரடியாக தோல்வி பயத்தில் மோடியே மூன்றாந்தரமாக இஸ்லாமிய எதிர்ப்பு வெறுப்பை நாட்டின் மிகவும் பின்தங்கிய மக்கள் வாழும் மாநிலங்களின் மேடைகளில் முழங்கும் போது உறுதியாக அந்த அப்பாவி மக்கள் அதை நம்புவார்கள்.

மோடியே நமது பாதுகாவலர் என்று மீண்டும் முனகியபடி தங்கள் கோவணங்களைப் பறிகொடுத்து விட்டு கோவில்களில் நிர்வாணமாகப் படுத்துறங்கவும் அவர்கள் தயாராகி விடுவார்கள். 2G வழக்கில் ஆ.ராசா குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்து கொண்டிருந்த காலத்தில் எனது மேலதிகாரி ஒருவர் என்னை அழைத்து “பார்த்தாயா, ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீட்டை, பல ஆயிரம் கோடி இருக்கும்” என்று ஒரு WhatsApp செய்தியைப் பகிர்ந்து கொண்டார். அந்தப் படத்தை Smart SEO tools இல் போட்டு fact check செய்த போது அது கலிஃபோர்னியாவில் விற்பனைக்கு வரும் ஒரு தனியார் Resort என்பது தெரிய வந்தது. ஒரு ரியல் எஸ்டேட் இணையதளத்தில் வெளியாகி இருந்த விளம்பரத்தில் அந்த Resort இன் பல்கோணப் நிழற்படங்கள் வெளியாகி இருந்தது.

எனக்கு ஒரு வியப்பு என்னவென்றால், ஒரு வெளிநாட்டு இணையதளத்தில் இருந்து படங்களைத் திருடி, அதை மிக அழகாக ஆ.ராசாவின் வீட்டு சமையலறை, வரவேற்பறையில் தங்க முலாம், தோட்டத்தில் வைரங்கள் பொருத்தப்பட்ட மின்விளக்குகள் என்று கதை கட்டி அதை முதன்முதலாக உருவாக்கி forward செய்த அந்த மூளை யாருடையது என்பதுதான். அதுவும் ஒரு தேர்தல் காலம் தான், அநேகமாக 2014 தேர்தலாக இருக்கக்கூடும். இந்த வேலைகள் இந்தியாவில் ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப அணியின் உதவியோடு தேர்ந்த நிதி உதவியோடு செய்யப்படுகிறது.

பாரதீய ஜனதாவின் தகவல் தொழில் நுட்ப அணியில் ஏறத்தாழ 20,000 பேர் பணிபுரிகிறார்கள். இவர்கள் தான் இன்று இந்தியா முழுவதும் தேர்தல் காலங்களில் WhatsApp வழியாக பல்வேறு கட்டுக்கதைகளை உருவாக்கி சுற்றுக்கு விடுகிறார்கள். இது ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்குகிறது. சில மாதிரி WhatsApp Forward செய்திகளை இப்போது பார்ப்போம்.

1) பாகிஸ்தானில் இருந்து 50 பேர் கொண்ட குழு ஒன்று இந்தியாவில் இந்துக்களின் சொத்துக்களை ரகசியமாக சர்வே எடுக்கிறது.

2) இந்தியா 2050 இல் இஸ்லாமியர்கள் பெரும்பான்மை கொண்ட நாடாக மாறிவிடும்.

3) ராகுல்காந்தி ரகசியமாக சீனாவிடம் இந்தியாவை விற்று விட்டார், அதற்கு பரிசாக அவருக்கு பிரதமர் பதவி கிடைக்கும்.

4) இந்துக் கோவில்களை ரகசியமாகக் கண்காணித்து பாதுகாக்க ராமல்யான் என்ற விண்கலத்தை மோடிஜீ ஏவி இருக்கிறார், கண்டுபிடித்த அமெரிக்கா.

5) கடலுக்கு உள்ளே பிரதமர் மோடி சென்று வந்த கிருஷ்ணர் கோவிலில் பல லட்சம் கோடி மதிப்பிலான தங்கமும், வைரமும் கொட்டிக் கிடக்கிறது. அதை மீட்டு நாட்டு மக்களுக்கு வழங்கவே மோடி டைவ் அடித்து உள்ளே போனார்.

இவை எல்லாம் திட்டமிடப்பட்டு உருவாகி, நாட்டு மக்களிடையே உலவ விடப்படுகிறது. அதாவது நான்கு வெவ்வேறு செயல்திட்டங்கள். இந்த நாட்டு மக்களை மூடர்களாக்கி மூளைச்சலவை செய்து பார்ப்பனீய அடிப்படைவாத சக்திகளான பாரதீய ஜனதாவுக்கு வாக்களிக்க வைப்பதற்காக இந்த செயல்திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது.

1) இந்துத்துவப் பெருமைகள் / முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் அல்ல / மதச்சடங்குகள் மற்றும் நம்பிக்கைகளின் அறிவியல் உண்மை. மேற்கண்ட முதல் திட்டத்தில் பழம்பெருமைகள் பேசப்படும், இந்துக்கள், இந்துக் கடவுளர்களின் வீரதீரப் பிரதாபங்கள், திருநள்ளாறு சனீஷ்வரன் கோவிலுக்கு மேலே செயற்கைக் கோள்கள் செயலற்றுப் போவது… !பிளாஸ்டிக் சர்ஜரி 1000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நடந்தது, டெஸ்ட் டியூப் பேபி 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பிறந்தது என்று பல்வேறு பெருமைக்குரிய சித்தரிப்புகள் இடம்பெறும். இதன் மூலம் உணர்வுக் கொந்தளிப்பை உருவாக்கி சுய சிந்தனையை மழுங்கடித்து ஒரு Mob Mentality கங்கு மக்களைக் கொண்டு வருதல்.

2) நமது பெருமைகளை அழிக்க வரும் அந்நிய ஆற்றல்கள் / நமது மதத்தை முற்றிலும் அழிக்க வரும் சீனா, அமெரிக்கா / நமது வாழ்வுரிமையை அழிக்க வரும் இஸ்லாம் மற்றும் பாகிஸ்தான். இதில் இப்போது ஆர்.எஸ்.எஸ் IT Wing உடன் இணைந்து பணியாற்றுவது இந்திய ஊடகங்கள், Republic TV அர்னாப் கோஸ்வாமியாக இருக்கட்டும், Times Now இன் பத்மஜா ஜோஷியாகட்டும், ராகுல் சிவசங்கர் ஆகட்டும்…தமிழகத்தின் வர்ஷினியாகட்டும், மதன் கௌரியாகட்டும் முழு நேரப் பணியாக இட்டுக்கட்டப்பட்ட அந்நிய ஆற்றல்களின் அச்சுறுத்தல் குறித்து ஒரு உளவியல் அழுத்தத்தை தேசம் முழுமைக்கும் கொடுப்பார்கள்.

3) நீங்கள் அபாயத்தில் இருக்கிறீர்கள்! தேர்தல் காலங்களில் எல்லாம் ஏதாவது ஒரு அபாயத்தை இந்துத்துவத் தீவிரவாதிகளான ஆர்.எஸ்.எஸ், பாரதீய ஜனதாக் கும்பல் கையில் எடுக்கும். மதப்பாதுகாப்பு, தேசப் பாதுகாப்பு, வாசுகி பாம்பு, பாகிஸ்தான் தீவிரவாதம், சீன பயங்கரவாதம், அமெரிக்காவின் இந்தியாவுக்கு எதிரான சதி என்று பல்வேறு கோணங்களில் இந்த அபாய சங்கு ஒலிக்கப்படும். நாடு முழுவதும் இருக்கிற பெரும்பான்மை மக்களின் இதயத்தில் ஆழமாகப் பதியப்படும் இந்த அபாய சங்கு வெகு வேகமாக WhatsApp மற்றும் சமூக இணையதளங்களில் பரப்பப்படும்.

4) உங்களைப் பாதுகாக்க இதோ நாங்கள் இருக்கிறோம் / மோடியே நமது நாயகன் / மோடி ராமரின் அவதாரம் / பாரதீய ஜனதாவே இந்தியாவின் உண்மையான பாதுகாப்பு இறுதி ஆயுதம் இந்த செயல்திட்டம்தான், குறிப்பாக தேர்தல் காலத்தில் இது அதிவேகமெடுக்கும், நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று ஃபார்வர்டு செய்திகள் உங்களை முற்றுகையிடும். இறுதியில் மோடிக்கு வாக்களித்தால் மட்டுமே நம்மால் இந்தியாவில் வாழ முடியும் என்கிற அளவில் மூளைச்சலவை செய்து அதிகாரத்தை நோக்கியும், நிரந்தர வளம் மற்றும் வளச் சுரண்டலை நோக்கி பார்ப்பன நிலைச்சக்திகளை நகர்த்தும்.

இதுதான் ஹிட்லரின் மாதிரி, ஹிட்லர் முதலில் ஜெர்மானியர்களை பெருமைமிகு ஆரிய இனத்தவர் என்று உணர்ச்சி பொங்க ஒருங்கிணைய வைத்தான். பிறகு யூதர்களால் நமது உரிமைகள் அழிந்தது என்று கற்பனையாகவே வெறியூட்டினான், நாம் ஆபத்தில் இருக்கிறோம் என்று அவர்கள் கையில் ஆயுதங்களைக் கொடுத்து பல லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்று குவித்தான். ஏறத்தாழ பாரதீய ஜனதாவின் இந்த செயல்திட்டங்கள் அனைத்துமே ஃபாஸிச வெறியாட்டம் நிகழ்த்திய ஹிட்லரின் மாதிரிதான். மோடி நவீன யுகத்தின் ஹிட்லராக உருவாகிக் கொண்டிருக்கிறார். இந்தக் கூட்டத்தில் சிக்கி வரலாறு முழுக்க அவப்பெயர் எடுக்கப் போவது பார்ப்பனரல்லாத பிற இடைநிலைச் சாதியினர் தான். ஏனெனில் நிஜ ஹிட்லர்களான பார்ப்பன அடிப்படைவாதிகள் நாக்பூரில் ஒளிந்து கொண்டு மோடிகளையும், அண்ணாமலைகளையும் பணயம் வைத்திருக்கிறார்கள். மூளைச்சலவை செய்யப்பட்ட WhatsApp பல்கலைக்கழக மாணவர்களே இங்கிருக்கும் பார்ப்பனரல்லாத பிற சாதி பாரதீய ஜனதா ஆதரவாளர்கள். அவர்களை மீட்டெடுக்க இந்தத் தேர்தல் தான் கடைசி வாய்ப்பு. ஒருவேளை இம்முறையும் இந்துத்துவ அடிப்படைவாதிகள் வெற்றி பெற்றால் இனி வாய்ப்புகள் வழங்கப்படாது. வேதகால இந்தியா மலர்ந்து நாடு முற்றிலுமாக திவாலாகும். சாதியின் பெயரால், மதங்களின் பெயரால் ஒருவரை ஒருவர் கடித்துக் குதறியபடி நாம் முற்றிலுமாக அழிந்து போவோம்.

கை.அறிவழகன்

Image Courtesy : Ganapathy Raju – Quora

error: Content is protected !!