குலதெய்வ வழிபாடும், சாராயச் சாவுகளும் – கவர்னர் மறுப்பு!
![குலதெய்வ வழிபாடும், சாராயச் சாவுகளும் – கவர்னர் மறுப்பு!](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2024/06/governor-1.jpg)
நாட்டில் கள்ளச்சாராயச் சாவுகளுக்கு குலதெய்வ வழிபாடுதான் காரணம் என்பதால் குலதெய்வங்களை வழிபடும் திருவிழாக்களைத் தடை செய்ய வேண்டும் என கவர்னர் கூறியதாகப் பரவிவரும் தகவலை கவர்னர் மாளிகை மறுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் பலியானவர்கள் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களில் 16 பேருக்கு பார்வை முழுவதும் பறிபோய்விட்டது. இன்னும் 50 பேருக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில், தமிழ்நாடு கவர்னராக இருக்கும் ஆர்.என். ரவி, “தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள் தான். சாராயச் சாவுகளுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோவில் திருவிழாக்களைத் தடைசெய்ய வேண்டும்” என்று கூறியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.இதனை மறுத்து கவர்னர் மாளிகையான ராஜ் பவன் சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ராஜ் பவன் இந்த அறிக்கைகளை முற்றிலுமாக மறுப்பதுடன், தீங்கிழைக்கும் நோக்கத்துடன் பரப்பப்படும் இத்தகைய போலிச் செய்திகள் பொதுமக்களை தவறாக வழிநடத்துகின்றன” என்று என்று கூறப்பட்டுள்ளது.
https://x.com/rajbhavan_tn/status/1805252518454428063
இது போன்ற பொய் செய்திகளைப் பரப்பவதை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறியுள்ள ராஜ்பவன், “இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவது, மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது” எனவும் கவலை தெரிவித்துள்ளது.
இந்த போலியான தகவலைப் பரப்பியவர்கள் மீது முழுமையான விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் மாளிகை சார்பில் காவல்துறையில் முறையான புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..!