கூந்தலே ஆரோக்கிய கண்ணாடி!

கூந்தலே ஆரோக்கிய கண்ணாடி!

சிவப்பழகு கிரீம்களைப் பூசுவதாலோ, கடலை மாவு, பாசிப் பருப்பு மாவு, பால், மஞ்சள், பழ விழுது போன்ற இயற்கையான பொருள்களைப் பூசுவதாலோ சருமத்தை அழகாகவும், மினுமினுப்பாகவும் மாற்றவிட முடியும் என நம்புகிறீர்களா? செயற்கையான கிரீம்கள் மட்டுமல்ல, இயற்கையான பொருள்களைத் தோல் மீது பூசும்போதும் சருமத்துக்குத் தற்காலிகமான பலன்கள் மட்டுமே கிடைக்கும் என்கின்றனர் சரும நிபுணர்கள். சருமத்தின் அழகைத் தனியாகப் பராமரிக்க முடியாது, எல்லாமே முழு உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்ததுதான் என்பதே சரும நிபுணர்கள் வலியுறுத்தும் விஷயம்.

உணவே அடிப்படை

செயற்கை அழகு சாதனப் பொருட்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது அவற்றில் கலந்திருக்கும் பிளீச்சிங் பொருள்கள், பலவித சரும நோய்களை உருவாகக்கூடியவை. செயற்கை அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது சருமத்தில் அங்கங்கே தோன்றும் பிக்மெண்டேஷன் (pigmentation) எனப்படும் கறுப்புத் திட்டுகள் முகத்தில் தோன்றுவதுதான், அதற்கான அறிகுறி. முகப்பரு, முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை, வறண்ட சருமம் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்குத் தீர்வளிக்கும் முதல் மருந்து நாம் உட்கொள்ளும் உணவுதான். வெளிப்பூச்சு களிம்புகள் அத்தனையும் தற்காலிகத் தீர்வு மட்டுமே தரக்கூடியவை.

பளபளப்பான, அடர்த்தியான கூந்தல் வேண்டுமென்றாலும் முதலில் உடலை நன்றாகப் பராமரிக்க வேண்டும். கூந்தல், உடல் ஆரோக்கியத்தை வெளிக்காட்டும் கண்ணாடி. ஒற்றை முடியின் நீளத்தையும் அடர்த்தியையும் வைத்தே நம் உடலின் புரதச்சத்து, நீர்ச்சத்து ஆகியவற்றின் அளவை கணக்கிட முடியுமாம். சமீபகாலமாக இளையோர் அதிக எண்ணிக்கையில் எதிர்கொள்வது கூந்தல் நுனியில் வெடிப்பு, பொடுகுத் தொல்லை, வறண்ட சருமம் போன்ற பிரச்னைகள்தான். ஏ.சி அறையில் பல மணி நேரம் இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

பூசணிக்காய், கேரட், முள்ளங்கி, கீரை வகைகள், தர்பூசணி, கிர்ணி பழம் போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள காய்-கனிகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும், நிறைய தண்ணீர் பருகுவதன் மூலமும் இயற்கை வழியிலேயே இந்தச் சிக்கல்களை எளிமையாகச் சரிசெய்ய முடியும் என்கிறார்கள் அழகு மைய நிர்வாகிகள்

error: Content is protected !!