அதிபர் தேர்தல்:டிரம்ப் Vs பைடன்- அனல் பறந்த நேரடி விவாதம்!

அதிபர் தேர்தல்:டிரம்ப் Vs பைடன்- அனல் பறந்த நேரடி விவாதம்!

லகின் பெரியண்ணா என்று தன்னை வர்ணித்துக் கொள்ளும் அமெரிக்காவில் இந்தாண்டு நவ. மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்.வழக்கமாக அந்நாட்டில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் தலைவர்கள் ஒரே மேடையில் விவாதம் நடத்துவார்கள். இதுபோல ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதம் நடத்துவதால் யார் பெஸ்ட் என மக்களால் எளிதாகத் தேர்ந்தெடுக்க சாய்ஸ் கிடைக்கிறது.

அந்த வகையில் பைடன், டிரம்பு இடையேயான முதல் விவாதம் இன்று காலை இந்திய நேரப்படி ஆறரை மணிக்கு நடைபெற்றது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல சிஎன்என தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சியை நடத்தியது. இதற்காக பல்வேறு ரூல்ஸ்களும் வகுக்கப்பட்டது.. இரு தலைவர்களுக்கும் தனித்தனியாகப் பேச நேரம் ஒதுக்கப்பட்டது. மேலும், ஒருவர் பேசும் போது மற்றவரின் மைக் ஆப் செய்யப்பட்டது. அதாவது 81 வயது பைடன் மற்றும் 78 வயது ட்ரம்ப் என இருவருக்கும் இது முக்கியமான விவாத மேடையாக அமைந்தது. சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாத நிகழ்வில் ஜேக் டேப்பர் மற்றும் டானா பாஷ் ஆகியோர் நெறியாளர்களாக இதில் செயல்பட்டனர்.இந்த நிகழ்வு நடைபெறும் இடத்தில் நேரடி பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஏனெனில், இரு தரப்பு ஆதரவாளர்களின் செயல்கள் எந்த வகையில் விவாதத்தை சீர்குலைய செய்யக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. அதோடு முன்கூட்டியே எழுதி கொண்டு வரும் குறிப்புகளுக்கு அனுமதி இல்லை. இதில் ட்ரம்ப் வலது பக்கமும், பைடன் இடது பக்கமும் நின்ற படி பேசினார்கள். இருவரும் தொடக்க உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படவில்லை .வழக்கமாக விவாதங்களின் போது நெறியாளர்கள் ஒவ்வொருவராக பேச அனுமதிப்பார்கள். சில நேரங்களில் ஒருவர் பேசும் போது மற்றவர் குறுக்கிட்டு பேசுவார்கள். சமயங்களில் அப்படி குறுக்கிட்டு பேசுபவர்களின் மைக் மியூட் செய்யப்படும். ஆனால், இன்று பைடனும் ட்ரம்பும் பங்கேற்று விவாதிக்கும் இந்த நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட மைக்கில் பச்சை நிற விளக்கு ஒளிரும் போது பேசினால் மட்டும் அது நேரலையில் கேட்க முடியும். அந்த விளக்கு ஒளிராத நேரங்களில் பேசினால் அது யாருக்கும் கேட்காது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனால் மட்டுமின்றி ஏகப்பட்ட காரணங்களால் இந்த நேருக்கு நேர் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதமாக இன்று நடந்த விவாதத்தில் அனல் பறந்தது. பணவீக்கம், குடியேற்றம், கருக்கலைப்பு உரிமைகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து விவாதம் நடந்தது. விவாதம் முதலில் பணவீக்கம் குறித்துத் தொடங்கியது..தனக்கு முன்பு ஆட்சியில் இருந்த டிரம்ப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து இருந்தார் என்றும் தனது ஆட்சியில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும் மருந்துகள் விலைகள் குறைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த டிரம்ப், பைடன் ஆட்சியில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது உண்மை தான், ஆனால் அது முறைகேடாகக் குடியேறியவர்களுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டதாக விமர்சித்தார். மேலும் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்றும் பதிலடி கொடுத்தார்..அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர் என்று இருவரும் மாறி மாறி விமர்சித்துக் கொண்டனர்.

டிரம்ப் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் என பைடன் கூறியதற்கு, ஜெயிலுக்கு போக வேண்டியது யார் என்பதை கமிட்டி முடிவு செய்யும். பைடனின் மகனும் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளி தான். பைடன் கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் எனக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. அத்துடன் கொரோனா போன்ற நெருக்கடி நேரத்திலும் எந்த பிரச்சனையும் இன்றி சிறப்பாக ஆட்சியை நடத்தினேன் என டிரம்ப் பேசினார். மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் சுகாதாரத்துக்காக அதிக அளவில் எனது ஆட்சியில் செலவிடப்பட்டது. அமெரிக்கா தகுதியான தலைவரை பெற்றிருந்தால் உக்ரைன் போர் தொடங்கியிருக்காது. என்றார்.

பைடனுக்கு வயதாகிவிட்டதாக விமர்சனங்கள் டிரம்ப் விமர்சித்த நிலையில், அதற்கு பைடன் பதிலடி கொடுத்துள்ளார். இத்தனை காலம் அனுபவம் பத்தவில்லை என்று விமர்சிப்பவர்கள். இப்போது வேறு வழியில்லாமல் வயதாகிவிட்டதாக விமர்சிப்பதாகச் சாடினார். ஆப்கானிஸ்தான் போர், உக்ரைன் போர், காசா போர் குறித்தும் இருவரும் முக்கியமான பாயிண்டுகளை முன்வைத்தனர்.இப்படி இரு தரப்பும் மாறி மாறி காட்டமான விமர்சனங்களை முன்வைத்தனர். அதேநேரம் இந்த விவாதத்தில் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது டிரம்ப் தான் ஆதிக்கம் செலுத்தினார். மொத்தமாக விமர்சனங்களுக்குப் பதில் கொடுக்கும் பகுதியில் டிரம்ப் சுமார் 23 நிமிடங்கள் பேசினார். அதேநேரம் பைடன் 18 நிமிடங்கள் மட்டுமே பேசினார். பைடன் பேசும் போது பல இடங்களில் திக்கித் திணறினார். அவரது பலமுறை இருமிக் கொண்டே இருந்தார். அவரால் நீண்ட நேரம் தொடர்ச்சியாகப் பேச முடியவில்லை என்பதை கவனிக்க முடிந்தது..

error: Content is protected !!