இளவரசி கேத் மிடில்டன் அரச கடமைகளுக்கு திரும்ப வாய்ப்பில்லை?

இளவரசி கேத் மிடில்டன் அரச கடமைகளுக்கு திரும்ப வாய்ப்பில்லை?

தி கிரேட் பிரிட்டன் எனப்படும் இங்கிலாந்து நாட்டு மன்னரும், கேத் மிடில்டனின் மாமனாருமான சார்லஸ் ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூழலில் இளவரசி கேத் மிடில்டனும் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதால் இந்த ஆண்டு முழுவதும் பொதுவெளியில் தலைகாட்ட மாட்டார் என்று ஒரு வாரத்திற்கு முன்பு டெய்லி பீஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது. இப்போது நியூயார்க்கை தளமாகக் கொண்ட யு.எஸ். வீக்லி இதழில் புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதில், இளவரசி கேத் மிடில்டன் அரச கடமைகளுக்கு திரும்பாமல் போகலாம் என கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு கிடைத்த தகவலை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டிருப்பதை பலரை அப்செட் ஆக்கியுள்ளது.

வேல்ஸ் இளவரசர் வில்லியமின் மனைவி கேத்தரின் கேத் மிடில்டன். இவருக்கு வயது 42. இவர்கள் இருவரும் கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கேத் மிடில்டனை காணவில்லை என வதந்திகள் பரவின. இதற்கு பதிலளிக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் கென்சிங்டன் அரண்மனை தரப்பில், “லண்டன் மருத்துவமனையில் கேத் மிடில்டன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2 வாரங்கள் தொடர் சிகிச்சையில் அவர் உள்ளார்” என கூறப்பட்டது .

ஆனாலும் வதந்திகள் தொடர்ந்து வந்த நிலையில், தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வீடியோ மூலமாக தற்போது தெரியப்படுத்தி உள்ளார் கேத் மிடில்டன். தான் ஜனவரியில் மருத்துவமனையில் இருந்தபோதுதான் தனக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வீடியோவில் பேசியுள்ள அவர், “எனக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவக் குழுவினர் அறிவுறுத்தியுள்ளார்கள். நோய் குறித்து அறிந்தவுடன் நானும் வில்லியம்சும் மிகப்பெரிய அதிர்ச்சியில் உறைந்தோம். இருப்பினும் தற்போது மீண்டுவருகிறோம். நோய் குறித்து எங்களின் குழந்தைகளிடமும் தெரிவித்துவிட்டோம்.குடும்ப நலன் கருதியே இத்தனை நாட்கள் வெளியில் தெரியப்படுத்தாமல இருந்தோம். நான் இப்போது நலமாக இருக்கிறேன். இதிலிருந்து மீண்டுவர கீமோதெரபி சிகிச்சையை அதே மருத்துவமனையில் நான் தொடர்ந்து வருகிறேன். இதில் இருந்து மீண்டு வர ஒவ்வொரு நாளும் மனதளவிலும், உடல் அளவிலும் வலுப்பெறுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இவருக்கு என்ன புற்றுநோய் பாதித்துள்ளது என்பது குறித்த விவரங்கள் இன்னும் சொல்லப்படவில்லை. இருப்பினும் இளவரசி முழுமையாக குணமடைவார் என்று கென்சிங்டன் அரண்மனை நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில் கேத் மிடில்டன் தனது புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு என்னென்ன பணிகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து அவரது மருத்துவ குழு மறு மதிப்பீடு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவக் குழு அனுமதித்தால் அவர் அரச கடமைகளுக்கு திரும்புவார் என அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன.

error: Content is protected !!