PT.சார்- விமர்சனம்!

PT.சார்- விமர்சனம்!

தேசிய குற்ற ஆணவங்கள் காப்பகத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி தமிழகத்தில், பாலியல் வல்லுறவு, பாலியல் சீண்டல் உள்பட பல்வேறு போக்சோ குற்றங்களில், 2015இல் 1,064 வழக்குகளில், 0 – 18 வயது வரையுள்ள 1,080 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2018இல், 1,458 வழக்குகளில், 1,466 குழந்தைகளும், 2019இல் 1,747 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தனர்.கொரோனா பரவல் தொடங்கிய, 2020இல் தமிழகத்தில், 3,143 வழக்குகளில், 3,145 குழந்தைகள் மற்றும் 2021இல் 4,415 வழக்குகளில், 4,416 குழந்தைகள் பாலியல் ரீதியிலான பாதிப்பை சந்தித்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டை கொரோனாவுக்கு முந்தைய 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழகத்தில் இரண்டு மடங்கு வழக்குகள் அதிகரித்துள்ளன. பதிவான வழக்குகளிலேயே இத்தனை குழந்தைகள் என்றால், நடந்ததை வெளியில் சொல்லாமல் அல்லது வழக்குப் பதிவு செய்யாமல் விட்டதில் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்னும் சூழலில் பாலியல் தொந்தரவு மற்றும் அன்றாடம் அனைத்து வயது பெண்களும் சந்திக்கும் பிரச்னைகளைப் பேச படக்குழுவினர் முயற்சி செய்துள்ளனர். அதே சமயம் எடுத்துக் கொண்ட கதையை நாடகத்தனமாய் கொடுத்து போரடிக்க வைத்து விட்டர்கள்.

அதாவது ஒரு ஊரில் செல்வாக்கு மிக்க மனிதராக உலா வரும் மம்பட்டி தியாகராஜன் காலேஜ் மற்றும் ஸ்கூல்களை நடத்தி வருகிறார். அவரது பள்ளியில் P.T வாத்தியாராக ஒர்க் செய்யும் ஹீரோ ஹிப் ஹாப் ஆதி, கண் முன் என்ன பிரச்சனை நடந்தாலும், அதை கண்டுக்கொள்ளாமல் ஒதுங்கிப் போகும் பயந்த சுபாவம் கொண்டவர். இதற்கிடையே, ஆதியின் எதிர்வீட்டில் வசிக்கும் தங்கைப் போன்றவரான காலேஜ் மூன்றாம் ஆண்டு மாணவி அனிகாவுக்கு கல்லூரி நிர்வாகம் மூலம் பாலியல் பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்துக் கொள்கிறார். அனிகாவின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்று வழக்கு தொடரும் ஹிப் ஹாதி, அதற்கு காரணமான தியாகராஜனை எதிர்த்து போராட, அதனால் விளவதென்ன என்பதுதான் பிடி சார் படக் கதை.

நாயகன் வாத்தியார் கனகவேலாக ஹிப் ஹாப் ஆதி. பிடி வாத்தியார் ரோலுக்கு அருமையாக பொருந்திப்போய் துறுதுறுவென வலம் வந்தாலும், நடிப்பு என்று வரும் போது வழக்கம் போல் சொதப்பி விடுகிறார். ஆனாலும் படம் ஈரோட்டில் நடப்பதால் படத்தில் ஆங்காங்கே கோயம்புத்தூர் தமிழ் சற்று மேலோங்கி இருக்கிறது. அதை ஹிப் ஹாப் ஆதி பர்ஃபெக்டாக செய்து ஸ்கோர் செய்து விடுகிறார். காஷ்மீரா தமிழ் சினிமாவின் வழக்கமான ஊறுகாய் நடிகையாக, வழக்கம்போல் டூயட்டுக்கும் நாயகன் ஹிப் ஹாப் ஆதியை பின்னால் சுற்ற விடவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

நாயகியைத் தாண்டி கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடிகை அனிகா. கதை இவரை மையப்படுத்தியே அமைந்துள்ள நிலையில், தேவையான அளவான நடிப்பை வழங்கி படத்துடன் ஒன்ற வைத்துள்ளார். தியாகராஜன் வழக்கமான வில்லனாக கதையில் வந்து செல்கிறார். பிரபு, பாக்கியராஜ், தேவதர்ஷினி, பட்டிமன்றம் ராஜா என நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும், இளவரசு மட்டுமே கவனம் ஈர்க்கிறார். பாண்டியராஜன், முனீஷ்காந்த் என காமெடி நடிகர்கள் என்ற டைட்டிலில் இடம் பெற மட்டுமே படத்தில் இருக்கிறார்கள்.

கேம்ராமேன் மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறது.படத்திற்கு வழக்கம் போல் முழு இசைக்கும் பொறுப்பேற்று இருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. இந்தப் படத்தில் பாடல்கள் பெரிதாக இடம்பெறவில்லை என்றாலும் பின்னணி இசையை பரவாயில்லை என்று சொல்லும்படியே கொடுத்து இருக்கிறார்.

புதுமுக டைரக்டரான கார்த்திக் வேணுகோபாலன் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் பற்றியும், அதை சமூகம் எப்படி பார்க்கிறது, என்பதையும் 5 வயது சிறுமி முதல் 50 வயது பெண்கள் வரை தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனையை, சக மனிதர்கள் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்பதை அழகாக காட்சிப்படுத்தியிருந்தாலும் ஆரம்ப பேராவில் சொன்னது போல் சினிமாத்தனாமாகவே திரைக்கதையை கொண்டு போயிருப்பதால் கவரத் தவறி விட்டார்

மொத்தத்தில் இந்த பிடி சார் – எல்லாருக்கும் பிடிக்காமல் போய் விட்டார்

மார்க் 2.5/5

error: Content is protected !!