சபாநாயகர் தேர்தல்:ஓம் பிர்லாவை எதிர்த்து போட்டியிடும் கே.சுரேஷ் யார்?
![சபாநாயகர் தேர்தல்:ஓம் பிர்லாவை எதிர்த்து போட்டியிடும் கே.சுரேஷ் யார்?](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2024/06/GQ5mHKfWgAARkOm.jpg)
நடந்து முடிந்த பார்லிமெண்ட் தேர்தலில் பா.ஜ.க, தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப்பெற்றது. இதில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மோடி, 3வது முறையாக பிரதமரானார். அவரது அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் கணிசமான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. அதே சமயம் லோக்சபா சபாநாயகர் பதவியை கைப்பற்ற சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் முட்டி மோதின. இதற்கிடையே தற்காலிக சபாநாயகராக பார்த்துஹரி மஹதப் என்பவர் நியமிக்கப்பட்டார். அத்துடன் சபாநாயகராக இருந்த ஓம் பிர்லாவை மீண்டும் சபாநாயகராக்க பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது. இதற்கு கூட்டணி கட்சிகளும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இன்று பிரதமர் மோடியை சந்தித்த ஓம் பிர்லா சிறிது நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். இன்று, அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி கோடிகுன்னில் சுரேஷை களமிறக்கி உள்ளது. கே.சுரேஷ், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோடிக்குன்னில் எனும் பகுதியில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தை பெயர் குஞ்சன், தாய் பெயர் தங்கம்மா. கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்தாலும், சட்டக் கல்லூரியில் படித்திருக்கிறார் சுரேஷ். இவர் கடந்த 1989-ம் ஆண்டு முதன்முறையாக மக்களவை எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டார். இதன்பின்னர் 1991, 1996 மற்றும் 1999 ஆகிய மூன்று முறையும் அடூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவை எம்பி ஆனார் சுரேஷ், பின்னர் 2009, 2014, 2019 மற்றும் 2024-ல் நடைபெற்ற தேர்தல்களிலும் வெற்றிபெற்று எம்.பி ஆன சுரேஷ், மக்களவையில் நீண்ட காலம் எம்.பி ஆக உள்ளவர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரராகவும் இருக்கிறார். இவர் சுமார் 29 ஆண்டுகள் எம்.பி ஆக பணியாற்றி இருக்கிறார்.
இவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மாவேலிகரா தொகுதியில் போட்டியிட்டார். அங்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி கண்டார் சுரேஷ். அவர் இந்த சபாநாயகர் தேர்தலில் களமிறங்கி உள்ளது வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதாவது பாராளுமன்ற வரலாற்றில் இரண்டு முறை (1952,1976) சபாநாயர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று இருக்கிறது. நாளை மூன்றாவது முறையாக தேர்தல் நடக்க இருக்கிறது. மற்ற நேரங்களில் ஆளும் – எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒருமித்த கருத்துடன் சபாநாயகர் தேர்வு என்பது நடந்திருக்கிறது. துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்கினால் தேசிய ஜனநாயக கூட்டணியின் சபாநாயகர் வேட்பாளரை ஆதரிக்கத் தயார் என இந்தியா கூட்டணி கூறியிருந்தாக குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டு முதல் துணை சபாநாயர் பதவி காலியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது ச்ரேஷ் ஓம் பிர்லாவை வீழ்த்தி சபாநாயகர் ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்