தாய் நாட்டுக்கு திரும்பிடுங்க! – அகதிகளுக்கு இலங்கை அதிபர் வேண்டுகோள்-
![தாய் நாட்டுக்கு திரும்பிடுங்க! – அகதிகளுக்கு இலங்கை அதிபர் வேண்டுகோள்-](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2017/02/refuges-feb-16.jpg)
அரசு முறைப் பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு செவ்வாய்க்கிழமை சென்ற ரணில் விக்ரமசிங்கே, அந்நாட்டின் பிரதமர் மால்கம் டர்ன்புல்லை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினர். கடத்தலை ஒடுக்குவது குறித்து இருவரும் விவாதித்தனர்.இலங்கை-ஆஸ்திரேலியா இடையே தூதரக ரீதியிலான உறவு தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை யொட்டி, இருவரும் பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை அகதிகள் யாரும், ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் தேடி வரவில்லை.ஆனால், இலங்கை, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து பசிபிக் தீவு நாடுகளான பப்புவா நியூ கினியா, நௌரா ஆகிய நாடுகளில் சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டஇலங்கை அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களை தங்க வைப்பதற்கு தேவையான நிதி உதவிகளை ஆஸ்திரேலியா வழங்கி வருகிறது.ஆனால், அவர்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு உதவ முடியாது என்று அந்நாட்டு அரசு மறுத்துவிட்டது.இந்தச் சூழலில் அவர்களில் 1,250 பேரை அமெரிக்காவில் குடியேற்றம் செய்வதற்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புக் கொண்டார்.
இது குறித்து அகதிகளுக்கான வழக்குரைஞர் இயன் ரிந்தோல் கூறுகையில், “அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் நௌரா, நியூ கினியா ஆகிய நாடுகளுக்கு சென்றுவிட்டனர். அங்கு, அகதிகளிடம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.
இந்நிலையில், கான்பெர்ரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ரணில் விக்ரமசிங்கே, “சட்டத்தை மீறி இலங்கையிலிருந்து அகதிகளாக ஆஸ்திரேலியாவுக்கு பலர் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் தாய்நாட்டுக்கு மீண்டும் திரும்ப வேண்டும். அவர்களுக்கு எதிராக எந்தவொரு வழக்கும் பதியப்பட மாட்டாது. அவர்கள் அனைவரையும் வரவேற்கிறோம். இலங்கையில் இருப்பதே அவர்களுக்கு பாதுகாப்பு” என்று ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.