தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களை பொசுக்க வரும் வெப்ப அலையும், மீள யோசனைகளும்!

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களை பொசுக்க வரும் வெப்ப அலையும், மீள யோசனைகளும்!

ர இருக்கும் மே மாசம் 4ம் தேதிதான் தமிழகத்தில் கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் வர உள்ளது. சுமார் 25 நாட்கள் தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடும் வெயில் மற்றும் வெப்பத்தில் மக்கள் தவித்து வரும் நிலையில் நேற்று முதல் வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று காலையில் இயல்புநிலையில் வெப்பம் இருந்தது. அது படிப்படியாக அதிகரித்து 11 மணி அளவில் தமிழ்நாடு முழுவதும் 100 டிகிரி என்ற அளவை எட்டியது. பின்னர் இந்த அளவு பெரும்பாலான இடங்களில் அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக உள் மாவட்டங்களில் மதியம் 12 மணி அளவில் 102 டிகிரியை எட்டியது. மதியம் 1 மணி முதல் 2 மணி அளவில் உள் மாவட்டங்களில் 104 டிகிரியை எட்டியது. இதற்கு காரணம் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பத்தின் அளவு நேற்று அதிகரித்தது. அதனால், அனேக இடங்களில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, மதுரை, பொள்ளாச்சி, சுவாமிமலை, சிவகாசி, சிவகங்கை, திருமங்கலம், மேலூர், திருப்பத்தூர், விருதுநகர், வேடச்சந்தூர், மணப்பாறை, அரவக்குறிச்சி, புல்லம்பாடி, பெருந்துறை, வெள்ளக்கோவில், தஞ்சாவூர், திருக்கோவிலூர், செஞ்சி உள்பட 25 இடங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது.

ஈரோடு, கரூர், பரமத்தி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 108 டிகிரி வெயில் சுட்டெரித்தது. திருச்சி, வேலூர், முசிறி, சேலம் ஆகிய இடங்களில் 106 டிகிரியாகவும் இருந்தது. மேற்கண்ட இடங்களில் அதிகரித்த வெயில் மற்றும் வெப்பத்தால், வெப்ப சலனம் ஏற்பட்டு 14 மாவட்டங்களில் நேற்று மதியத்துக்கு பிறகு லேசான மழை பெய்தது. இந்நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலகீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதனால், 26ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், உள் மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் பிற்பகலில் 30 முதல் 50 சதவீதமாகவும், மற்ற நேரங்களில் 40 முதல் 75 சதவீதமாகவும் கடலோரப் பகுதிகளில் 50 முதல் 85 சதவீதமாகவும் இருக்கும். ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி அதிகபட்ச வெப்பநிலை என்பது, வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் குறிப்பாக சமவெளி பகுதிகளில் வெப்ப அலை அதிகரித்து காணப்படும். இந்த இடங்களில் வெப்ப நிலையானது 39 முதல் 41 வரையிலான டிகிரி செல்ஷியஸ் என்றளவில் உயர்ந்து காணப்படும். இந்த அறிவிப்பில் இடம்பெறாத இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் 34 – 38 டிகிரி செல்ஷியஸில் வெப்பநிலை உயர்ந்து காணப்படும். வெப்ப அலை வீசுவது, காற்றில் ஈரப்பதம் வெகுவாய் குறைவது, வெயிலின் உக்கிரம் ஆகியவை, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயுற்றுவர்களை பாதிக்கக்கூடியதாகும். எனவே நண்பகல் நேரத்தில் இவர்கள், வெயிலில் அலைவதை தவிர்ப்பது நல்லது. ஏனையோரும், கோடை வெயிலுக்கு உகந்த ஆடைகள் முதல் உணவு ரகங்கள் வரை மாற்றங்களை நடைமுறைப்படுத்துவது, வெப்ப அலை வீச்சியின் உக்கிரத்தை தணிக்க உதவக்கூடும்.” என்று தெரிவித்துள்ளது.

கோடை வெயிலால் பாதிப்படைந்தால் என்ன செய்ய வேண்டும்? – சூரிய வெப்பம் அதிகமாக உள்ள திறந்தவெளியில் வேலை செய்யும்போது களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக வெப்பம் அதிகமுள்ள இடத்திலிருந்து வெப்பம் குறைவான குளிர்ந்த இடத்துக்குச் செல்ல வேண்டும். மேலும், தண்ணீர் / எலுமிச்சைப் பழச்சாறு / ORS கரைசல் பருக வேண்டும்.

மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்க வேண்டும். மிகவும் சோர்வாகவோ மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியைத் தாமதிக்காமல் நாட வேண்டும். வெயிலின் தாக்கத்தால் வேர்க்குரு, அரிப்பு, தேமல், மணல்வாரி அம்மை, வயிற்றுப் பிரச்சினை போன்றவை ஏற்படும். தண்ணீரை அதிகம் குடிக்காதவர்களுக்குச் சிறுநீரகக் கல் வரக் கூடும். உச்சி வெயிலில் விளையாடும் குழந்தைகளுக்கு வலிப்பு வருவதற்கு சாத்தியம் உள்ளது.

அத்துடன் என்னென்ன உணவு முறைகளை கடைபிடிக்கலாம் என்பதை அறிந்து கொள்வோமா?.

* வெயில் காலத்தில் வெப்ப நிலை அதிகமாக இருப்பதால் உடலில் இருந்து வியர்வை மூலம் நீர்போக்கு அதிகமாக இருக்கும். அதிகமான நீர்போக்கினால் உடல் சோர்வு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் உடலில் போதுமான நீர் இல்லாமல் போவதால் மயக்கம், அஜீரனம், மற்றும் சரும பிரச்சனைகள் வரக்கூடும். இதைத் தடுக்க நீர் மற்றும் சரியான உணவுகள் அருந்துவது அவசியம்.

* எங்குச் சென்றாலும் குடிநீர் கையில் வைத்துக்கொள்வது அவசியம். எவ்வளவு தண்ணீர் அருந்துகிறோமோ உடல் நிலை அவ்வளவு சீராக இருக்கும்.

* பொதுவாகக் காபி மற்றும் டீ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். காபி மற்றும் டீ உடல் வெப்பத்தை அதிகரிக்கும் குணங்கள் கொண்டவை எனவே வெப்ப சூட்டை தவிர்த்துக்கொள்ள டீ மற்றும் காபியை தவிர்ப்பது நல்லது.

* வெயில் காலத்தில் உணவு வகைகளில் பெரிதாக மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அரிசி, சப்பாத்தி போன்றவற்றை வழக்கம்போல் சாப்பிடுவதுபோல் சாப்பிடலாம். உணவில் மோர் தயிர் சேர்த்துக் கொள்வது நல்லது. நார்சத்து அதிகம் உள்ள பழங்கள் காய்கள் அருந்தலாம்.

* சுட்டெரிக்கும் வெயிலில் உடலைச் சீராக வைத்துக்கொள்ள, ஒவ்வொருவரும் அதற்குத் தகுந்த உணவுமுறையில் கட்டுப்பாட்டை கொண்டு வருவது அவசியம்.

.இந்த வெயிலுக்கு ஏற்ப நம் உடல் நிலையைக் கவனித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். அதற்கு இயற்கை பலவிதமான அற்புதங்களை நமக்கு வழங்கியிருக்கிறது. அவற்றுள் முக்கியமானது இளநீர். இது தென்னையின் அருட்கொடை. இளநீர் குளுமையான தித்திப்பான பானம் ஆகும். இதில் சோடியம், கால்சியம், குளுகோஸ், புரதம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. நூறு கிராம் இளநீரில் 17.4 சதவீதம் உள்ளது.

இளநீரின் நன்மைகள்: இளநீர் தாகத்தைப் போக்கிப் புத்துணர்ச்சியை அளிக்கும் குளுமையான பானம். இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். பசியைத் தூண்டும். பித்தவாதத்தைக் குணப்படுத்தும். அஜீரணக் கோளாறுகளைத் தடுக்கும். ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன. இதன் மூலம் இளநீர் உடல் சூட்டைத் தணித்துக் குளிர்ச்சியைத் தரும். இளநீர் குடல் புழுக்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது. இளநீர் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை கொண்ட பானமாகும். அதனால் காலரா நோயாளிகளுக்கு இது ஏற்ற பானம். ஊட்டச்சத்துக் குறைபாடுகளைச் சரி செய்கிறது. சிறுநீர்ப் பெருக்கியாக இளநீர் செயல் படுகிறது. சிறுநீர்க் கற்களைக் கரைக்க உதவுகிறது. சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது. உடல் எடையைக் குறைக்க ஏற்ற பானம். மாத விலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலிக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.

அத்துடன் நுங்கு, தர்பூசணி, , மோர், வெள்ளரிக்காய் போன்றவற்றைத் தவறாமல் உட்கொள்வது நல்லது. உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆட்டு இறைச்சி, மீன் ஆகியவற்றை அளவோடு சாப்பிடலாம். பதப்படுத்தப்பட்ட உணவு, கோழி இறைச்சி, கருவாடு போன்றவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

ORS கரைசல் தயாரிக்கும் முறை: 

1 பாக்கெட் ORS பொடியை 1 லிட்டர் சுத்தமான குடிநீரில் நன்றாகக் கலக்க வேண்டும். புதிதாகக் கலந்த கலவையை 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.

ஆரோக்கியமான உணவு முறைகளை கடைபிடித்து வெயில் காலத்தில் நம்மை நாமே பாதுகாத்து கொள்வது தான் புத்திசாலித்தனம்.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!