ஏ டி எம் மையங்கள் ஏப் – 8 முதல் முடங்கும் அபாயம்!

ஏ டி எம் மையங்கள் ஏப் – 8 முதல் முடங்கும் அபாயம்!

மைக்ரோசாப்ட் நிறுவனம், “விண்டோஸ் எக்ஸ் பி’ இயக்கத் தொகுப்புக்கு அளித்து வரும், பாதுகாப்பு மென்பொருள் சேவைகளை, ஏப்ரல் 8ம் தேதியுடன் நிறுத்த உள்ளது. இதனால், இந்த இயக்கத் தொகுப்பில் இயங்கும், பெரும்பாலான ஏ.டி.எம்.,கள், வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் கிடைக்காமல், முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ATM
மைக்ரோ சாப்ட் நிறுவனம், “விண்டோஸ் எக்ஸ் பி’ க்கான வைரஸ் எதிர்ப்பு உள்ளிட்ட, பாதுகாப்பு மென்பொருள் சேவைகளை நிறுத்த உள்ளது குறித்து கடந்த 2007ம் ஆண்டே அறிவித்தது. இத் தொகுப்பை பயன்படுத்துவோர் மேம்படுத்தப்பட்ட “விண்டோஸ்’ இயக்கத் தொகுப்புக்கு மாறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால், நடைமுறை சிக்கல்கள் காரணமாக பல்வேறு வங்கிகள் அவற்றின் ஏ.டி.எம்., இயக்கத்தொகுப்பை மேம்படுத்தாமல் விட்டு விட்டன.இந்த நிலையில், மைக்ரோசாப்ட் விதித்த “கெடு’ இன்னும் இரு வாரங்களில் முடிவடைவதால் எஸ்.பீ.ஐ., உள்ளிட்ட பல வங்கிகள் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியுள்ளன. எனினும் நாட்டில் உள்ள 1.45 லட்சம் ஏ.டி.எம்.,களில் பெரும்பாலானவற்றின் இயக்கத் தொகுப்பையும் குறுகிய காலத்தில் மேம்படுத்துவது என்பது இயலாத காரியம் என்கின்றனர், இத்துறை சார்ந்தவர்கள்.

இந்நிலையில் சைமன்டெக் போன்ற நிறுவனங்கள் மேம்பட்ட இயக்கத் தொகுப்புக்கு மாறும் வரை ஏ.டி.எம்.,களுக்கான பாதுகாப்பு மென்பொருள் சேவைகளை வழங்கத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளன. இருந்தபோதிலும் ஒவ்வொரு ஏ.டி.எம்.,மிலும் மென்பொருளை உள்ளீடு செய்வதும் அதற்காக சில பழைய இயந்திரங்களின் வன்பொருளில் மாற்றம் செய்வதிலும் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க முடியாது. அதுவரை அத்தகைய ஏ.டி.எம்.,கள் முடங்குவதையும் தடுக்க முடியாது என்கின்றனர் ஆய்வாளர்கள்

error: Content is protected !!