புஜ்ஜி At அனுப்பட்டி விமர்சனம்!

புஜ்ஜி At அனுப்பட்டி விமர்சனம்!

ரம்பக் காட்சியே ஒரு கசாப்புக் கடையில் தான் தொடங்குகிறது. மாமிச பிரியனான சரவணன் கால் கிலோ கறி கிடைத்தால் போதும் என்று வாங்கச் செல்ல அங்கே அவனுக்கு ஒரு கிலோ கறி அன்பளிப்பாகக் கிடைக்கிறது. ஏகப்பட்ட மகிழ்ச்சியோடு வீட்டுக்குச் செல்கிறான். அப்படியாப்பட்ட மாமிசப் விரும்பியான அண்ணன் சரவணன் ஒரு கட்டத்தில் அவனது தங்கை துர்கா முள்புதர் ஒன்றில் இருந்து எடுத்து வந்த ஆட்டுக்குட்டிக்கு புஜ்ஜி என்று பெரேல்லம் வைத்து அதன் மீது வைத்திருக்கும் அளவற்ற பிரியத்தைப் பார்த்து கறி சாப்பிடுவதையே விட்டு விடுகிறான். குடும்பத்தின் வறுமையின் விளைவால் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்ளும் பெற்றோர் மத்தியில் ஆட்டுக்குட்டி மீது அண்ணன், தங்கை இருவரும் பாசம் காட்டி அவர்களது உலகத்தில் வாழ்கிறார்கள். ஒரு கட்டத்தில் குடிகார அப்பாவால் விற்கப்பட்ட ஆட்டுக்குட்டி எங்கு சென்றது என்று தெரியாமல் துர்கா தவிக்க சரவணன் அவளுடன் சென்று தேடத் தொடங்கி பல ஊர்களுக்குப் பயணம் செல்கிறார்கள். பட்டணம் தொடங்கி பீடம் பள்ளி, ஐயம்பாளையம், பல்லடம் ,கண்ணம்பாளையம், அனுப்பட்டி என்று பயணம் செய்கிறார்கள்.அந்த தேடல் பயணத்தில் அவர்கள் பல நல்ல மனிதர்களையும் கெட்ட மனிதர்களையும் சந்திக்கிறார்கள்.ஒரு கட்டத்தில் அது கசாப்பு கடைக்காரர் ஒருவரிடம் விற்கப்பட்டது அறிந்து அந்த ஆட்டுக்குட்டியைத் தங்களிடம் கொடுத்து விடுமாறு கெஞ்சி மன்றாடுகிறார்கள். கசாப்புக் கடைக்காரர் தான் பணம் கொடுத்து வாங்கியதாகவும் ஐயாயிரம் ரூபாய் கொடுத்தால் கொடுத்து விடுவதாகவும் கூறுகிறார். அந்தத் தொகையைத் திரட்டுவதற்காகப் பல்வேறு இடங்களில் இந்த குழந்தைகள் போராடுகின்றன. சிறுகச் சிறுக எதிர்ப்படும் மனிதர்களிடமெல்லாம் நிதி உதவி கேட்டு பணம் சேர்த்துத் திரட்டிக் கொண்டு போனால் அந்த ஆட்டுக்குட்டி அதற்குள் கைமாறி ஊர் மாறிச் சென்று விடுகிறது. அதைத் தேடி பதற்றத்தோடு பயணம் செய்கிறார்கள். இறுதியில் அந்த உணர்ச்சிமிகு போராட்டம் முடிவுக்கு வருகிறது .

மெயின் ரோலில் நடித்திருக்கும் குட்டிப் பெண் பிரணிதியும், கார்த்திக் விஜய்யும் உண்மையிலேயே அந்த ஆட்டுக்குட்டியிடம் பாசமாய் பழகியது போல. புஜ்ஜியைப் பிரிந்த அந்த நடிப்பில் அத்தனை உணர்ச்சியைப் பார்க்க முடிகிறது. புஜ்ஜியைத் தேடும் அவர்களது முயற்சியில் இணையும் அவர்களது அப்பாவின் முதலாளி கமல்குமாரும், லாவண்யா கண்மணியும் கூட ஸ்கோர் செய்கிறாகள்.

காணாமல் போன புஜ்ஜி கிடைத்ததா இல்லையா என்பதுதான் ஒன்லைன் ஆக இருக்க ஆனால் அது மட்டுமே கதை இல்லை – இதை ரசிகர்கள் ரசிக்கவும் வேண்டும் என்கிற நோக்கத்தில் குழந்தைகளின் தயாள உள்ளம், குழந்தைகள் கடத்தல், காவலர்களின் சின்னப் புத்தி, குழந்தையின் அப்பாவுக்கு ஆபத்து என்றெல்லாம் ஏகப்பட்ட உணர்ச்சிகளின் அடிப்படையில் திரைக்கதையில் பரபரப்பைக் கூட்டி கவர் முயன்றிருக்கிறார் இயக்குனர் ராம் கந்தசாமி.

அந்த வகையில் அட்டுக்குட்டியான புஜ்ஜி கசாப்பு கடைக்காரரிடம் சென்று சேர்ந்து, அவர் அதை அறுக்க முற்படும் போது நமக்கு பதைபதைப்பு மேலிடுகிறது.

ஒட்டுமொத்தமாக போலீஸ் துரை தவறானவர்கள் கையில் இல்லை, அதில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்கிற உண்மையை காவல்துறை அதிகாரியாக வரும் நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரியின் நேர்மை புரிய வைத்து விடுகிறது..!

கேமராமேன் அருண் மொழிச் சோழன் இயல்பான கதை ஓட்டத்திற்கு ஏற்றபடி ஒளிப்பதிவு செய்துள்ளார் . கதையின் பயணத்தின் வேகத்தில் படத்தொகுப்பு செய்துள்ளார் எடிட்டர் சரவணன் மாதேஸ்வரன்.படத்தின் பெரிய பலமாக கார்த்திக் ராஜாவின் இசை அமைந்துள்ளது.புதிய படக் குழுவினரின் ஒரு படத்தினை அவர் தனது நேர்த்தியான பின்னணி இசையால் பல மடங்கு உயரம் கூட்டிக் காட்டி உள்ளார்.பாடல்களும் பக்கபலமாக அமைந்துள்ளன. குறிப்பாக கார்த்திக் வரிகளில் அமைந்த ‘புஜ்ஜி புஜ்ஜி என் செல்லத் தங்கம்’ பாடலின் இசையும் படமாக்கி உள்ள விதமும் புன்முறுவல் ஏற்படுத்தி விடுகிறது.

குழந்தைகளை மையப்படுத்திய கதையோட்டத்தில் சர்க்கடிக்கும் காட்சிகளும், கெட்ட போலீசுக்கான சீனகள் ஏனோ நெருடலை ஏற்படுத்திகிறது. ஆனாலும் உயிர்களிடத்தில் அன்பு செலுத்தல் வேண்டும் என்ற கருத்தைச் சொல்லாமல் சொல்கிற இந்தப் படத்தில் ஆட்டுக்குட்டி புஜ்ஜியைத் தேடும் துர்காவின் பாசமும் தவிப்பும் கொண்ட பயணத்தில் படத்தின் பார்வையாளர்களாகிய நம்மிடமும் கடத்துவதில் ஜெயித்து விட்டார்கள் என்றே சொல்லலாம்

மொத்தத்தில் இந்த புஜ்ஜிக் குட்டி – லைக் வாங்கி விடுகிறது.

மார்க் 3/5

error: Content is protected !!