மகாராஜா -வில் விஜய்சேதுபதிக்கு ஏன் ஹேர்ஸ்டைலிஷ் கேரக்டர்?

மகாராஜா -வில் விஜய்சேதுபதிக்கு ஏன் ஹேர்ஸ்டைலிஷ் கேரக்டர்?

கோலிவுட்டில் நாயகன், வில்லன் என இரண்டு வேடங்களிலும் கலக்கி வருபவர் விஜய்சேதுபதி. அடுத்தடுத்து ஏகப்பட்ட படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா Maharaja.இயக்குனர் நித்திலன் சாமிநாதன் டைரக்‌ஷனில் விஜய் சேதுபதி நடித்து இருக்கும் திரைப்படம் தான் மகாராஜா. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் 50-வது படம் என்பதால் இபபடத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் வில்லனாக நடித்துள்ளார். இவர்களோடு நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்திற்கு அஜ்னீஸ் லோக்நாத் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படம் 2024-இன் ‘இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் லாஸ் ஏஞ்சல்ஸ்’ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. அதே சமயம் இந்த மகாராஜா படத்தின் டிரைலர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மஹாராஜா’ திரைப்படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படம் குறித்து பேசிய டைரக்டர் நித்திலன் சாமிநாதன், “நான் கமிட்டாகும் போது இந்தப் படம் விஜய் சேதுபதியின் 50வது படம் எனத் தெரியாது. ஷூட் போறதுக்கு முன்புதான் தெரியும். ஷூட் போய்க்கிட்டு இருந்த சமயத்திலும் வில்லன் ரோலுக்கு யாரும் கமிட்டாகவில்லை. ஷூட் இடைவெளியின் போதுக் கூட நிறைய பேரிடம் கதை சொல்லிட்டு வந்தேன். கடைசியில் அனுராஜ் கஷ்யப் நடிக்க ஒப்புக்கொண்டது மகிழ்ச்சி. மகாராஜா கதாபாத்திரம், லட்சுமி யார் என்று தேடும் போதுதான், தான் யார் என்று புரியவருகிறது. படத்தின் கதையோட்டத்தில் ஒவ்வொரும் தங்களைப் பொருத்திக் கொண்டால் அனைவரும் மகாராஜாதான். ஜூன் 14 படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

மேலும் பேசும் போது, “நீங்கள் இப்போது டிரைலரில் பார்த்தது வெறும் 20 சதவீதம் தான், மீதி 80 சதவீதம் படத்தில் இருக்கிறது. சேது அண்ணாவின் 50 வது படம் என்பதால் கொஞ்சம் பொறுப்பு கூடியிருக்கிறது. ஒரு சாதாரண மனிதன், பெரிய படிப்பு அறிவு இல்லாதவர், அவர் வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத ஒரு சம்பவம் நடந்தால் அதை அவர் எப்படி எதிர்கொள்வார், அதன் மூலம் தான் யார்? என்பதை அவர் அறிந்துக்கொள்கிறார், என்பதை சஸ்பென்ஸாக சொல்லியிருக்கிறேன்.

படத்தில் சேது அண்ணாவின் பெயர் மஹாராஜா, அவர் வாழ்க்கையும் அதுபோல் தான் இருக்கும். அவரை சிகை அலங்கார கலைஞராக நடிக்க வைத்ததற்கு காரணம், வாழ்க்கையில் நிறைய பேரை சந்திப்போம், அதில் சிலர் நம் மனதுக்கு நெருக்கமாக இருப்பார்கள். அப்படி நான் பார்த்த மனிதர்களை கொண்டு தான் அப்படி ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்தேன், மற்றபடி சிலை அலங்கார தொழில் மற்றும் சாதி பற்றி படத்தில் எதுவும் பேசவில்லை

டிரைலரில் எக்ஸ்போஸ் செய்திருக்கும் `லட்சுமி யார்? என்ற சஸ்பென்ஸ் படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பயணிக்கும். ஆனால், படத்தின் மிகப்பெரிய பலமே அந்த ஒரு கேள்வி மட்டும் அல்ல, அதை சுற்றி மேலும் பல சுவாரஸ்யங்கள் படத்தில் இருக்கின்றன. அவை அனைத்தும் முழு படத்தையும் சஸ்பென்ஸாக நகர்த்தி செல்லும். நிச்சயம் இந்த படம் ரசிகர்களை முழுமையான திருப்திப்படுத்தும். அதனால் தான் டிரைலர் 20 சதவீதம் என்று சொன்னேன், 80 சதவீதம் படத்தில் இருக்கிறது. படம் பார்த்தவர்கள் அனைவரும் படம் நன்றாக வந்திருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். சேது அண்ணாவும் குடும்பத்துடன் படத்தை பார்த்தார், அவருக்கு படம் மிகவும் பிடித்திருக்கிறது என்று சொன்னதுடன், படத்தில் அவரையும் பிடித்திருப்பதாக சொன்னார்” என்றார்.

பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யம் நடித்தது குறித்து கேட்டதற்கு பதில் அளித்த இயக்குநர் நித்திலன், “எனக்கு பிடித்தவர்களில் அனுராக் காஷ்யப் சாரும் ஒருவர். எனக்கு பிடித்தவர்களை நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், அதேபோல் அந்த கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருந்ததாலும் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தேன். முதலில் அவரிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கிவிட்டேன். பிறகு அவரது தேதியில் மாற்றம் ஏற்பட்டதால் அவர் நடிக்க முடியாத சூழல் உருவானது. இதனால், வேறு சில நடிகர்களை பார்த்தோம், ஆனால் யாரும் செட்டாகவில்லை. இறுதியில் அனுராக் சாரே அந்த வேடத்தில் நடித்தது மகிழ்ச்சி. பாராதிராஜா சாரும் எனக்கு பிடித்தவர், அவரையும் நடிக்க வைத்திருக்கிறேன். குரங்கு பொம்மை படம் போல் அவரது வேடம் இல்லை என்றாலும், ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்.” என்றார்.

இப்பட நடிகை மம்தா மோகன் தாஸ் கூறுகையில், “தமிழ் சினிமாவில் அதிக இடைவெளி விழுந்துவிட்டது. காரணம், நான் மலையாளத்தில் பிஸியாக இருக்கிறேன். மஹாராஜா படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தது அதனால் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். ஆஷிபா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்போதைக்கு என் கதாபாத்திரம் பற்றி இவ்வளவு தான் சொல்ல முடியும். ஏனென்றால் என் கதாபாத்திரத்தை சுற்றி நிறைய சஸ்பென்ஸ் இருக்கிறது, அதனால் விரிவாக சொல்ல முடியாது.” என்றார்.

error: Content is protected !!