மேற்கு வங்காளம் உருவான தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? – தமிழ்நாடு கவர்னர் ரவி விளக்கம்!

மேற்கு வங்காளம் உருவான தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? – தமிழ்நாடு கவர்னர் ரவி விளக்கம்!

வெஸ்ட் பெங்கால் உருவான தின விழா, சென்னை கவர்னர் மாளிகையில் இன்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மேற்கு வங்க அசொசியேஷனை சேர்ந்த மேற்கு வங்க மக்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி நடத்தினார். பல்வேறு கலைப் பிரிவினர் மேற்கு வங்காள கலாச்சார நிகழ்ச்சிகளை அதன் பாரம்பரியம் மாறாமல் மேடையில் நிகழ்த்திக் காட்டினர்.

பின்னர் மேடையில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதன் சாராம்சம்:

“மேற்கு வங்காளமும், தமிழ்நாடும் நம் நாட்டின் உருவத்தை பல முறை மாற்றியுள்ளன. தமிழ்நாடு ’பாரதம்’ எனும் கருத்தியலின் தூய்மைத் தன்மையை உருவாக்கிய ஒன்றாக உள்ளது. அதே சமயம், வங்காளம் ’பாரதம்’ எனும் கருத்தியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. வங்காளம் அனைத்து துறைகளிலும் பல அறிவாளிகளை உருவாக்கியுள்ளது.

நமது சுதந்திரத்தை நோக்கி நடைபோட பாடலை பயன்படுத்தியவர் மகாகவி பாரதியார். அவர் பாரத மாதாவைப் பற்றி அதிகம் பேசியுள்ளார். செப்புமொழி பதினெட்டுடையாள், சிந்தனை ஒன்றுடையாள் என அவர் பாரத மாதாவை புகழ்ந்துள்ளார். 1972ம் ஆண்டு ஒரு பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் அறிக்கையின்படி, ஐரோப்பா, அமெரிக்க நாடுகள் கடந்த நூறு முதல் இருநூறு ஆண்டுகளாக தான் பணக்கார நாடுகளாக உள்ளன. ஆனால். நம் பாரதம் 1800 ஆண்டுகளாக பணக்கார நாடாக இருந்து வருகிறது.

இந்திய நாடு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸில் சிக்கியுள்ளது. காலணி ஆதிக்கத்தின் குற்ற உணர்ச்சியில் உள்ளது. இந்நாடு, தன்னை நினைத்தே பெருமைப்படும் சூழல் உருவாக வேண்டும் என விரும்பினார் விவேகானந்தர். அதனால்தான், சிகாகோ உரைக்குப் பிறகு நேராக சென்னைக்கு வந்தார். அவர் இந்தியாவை தன் பின்னே நடைபோட வைத்தார். இந்தியாவின் புதிய தலைமுறை இளைஞர்களை அவர் உருவாகினர்.

போரின் காரணமாக பல நாடுகள் அழிந்து போயின. அணு குண்டுகள் வீசப்பட்டு எதிர்காலம் கேள்விக்குறியான நிலை உருவானது. மனித இனம் தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் நிலைக்குச் சென்றது. ஆனால் இந்தியா மனித இனம் மொத்தமும் ஒரே குடும்பம் என்ற பார்வையை எப்போதோ பெற்றது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற சிந்தனை இந்தியாவிற்கு எப்போதோ வந்துவிட்டது. இந்தியா தான் இந்த பூமியை வழிநடத்திச் செல்ல தகுதியுடையது.

மேற்கு வங்காளம் உருவான தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என நாம் யோசிக்க வேண்டும். 1905ம் ஆண்டு இந்தியாவை பிரிக்க நினைத்தபோது தமிழ்நாட்டில் வ.உ.சி., பாரதியார் ஆகியோர் எதிர்த்தனர். ஆனால், 1947ல் முஸ்லீம் லீக் கொண்டு வந்த பரிந்துரை அடிப்படையில் மேற்கு வங்காளம் பிரிந்தது. கிழக்கு பாகிஸ்தான் உருவானது. நாடு என்பது மதம், மொழி ஆகியவற்றால் பிளவுபடுவதை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது.

நமக்கு முன் இருக்கும் நோக்கம் மிகப்பெரியது. அதை வென்றெடுப்பதை நாம் முக்கியமாகக் கொள்ளவேண்டும். நம் நோக்கத்திலிருந்து நம்மை திசை திருப்பும் பலவீனங்களை நாம் தூக்கி எறியவேண்டும்.” இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

error: Content is protected !!